Friday, April 19, 2024 11:04 am

Subscribe to our YouTube Channel

275,000SubscribersSubscribe
Home Blog

பண் பாடுவோம்-களம் புகுவோம்- N.R. இளங்கோ

               

தோழரே, நலமா?
     
தலைப்பிலே முரண் இருக்கிறதா ? இருக்கட்டும் ஏனெனில் அதற்கான தேவையிருக்கிறது.
     
நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுதுகிறேன். கடந்த மடல் ஒன்றில் பேராசிரியர் அவர்களின் “வகுப்புரிமைப் போராட்டம்” “[கம்யூனல் ஜி.ஒ” ]புத்தகத்தினை தொடர்ந்து சமூக நீதி குறித்த இப்போது வரையான  சட்டங்கள் குறித்தும், நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் தமிழில் எழுதிட வேண்டும் என எழுதியிருந்தேன். அதற்கான தகவல்களையும் திரட்டுகிறேன்.
அப்படி திரட்டும் போது , தொடர்பில்லா ஒர் எண்ணம் தோன்றியது.

ஒர் சட்டத்தினை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என்ற பணியை மட்டும் உயர்நீதி மன்றங்களும் மற்றும் உச்சநீதி மன்றமும் செய்வதில்லை. அந்த சட்டத்தினை எப்படி பொருள் கொள்வது என்பது குறித்த பணிதான் அந்த நீதி மன்றங்களின் பெரும் பணியாக உள்ளது.அதை ஆங்கிலத்தில் “Interpretation of statues” என்பார்கள்.


அப்படி சட்டத்தினை பொருள் கொள்வதற்கு அல்லது புரிந்து கொள்வதற்கு பல விதிமுறைகள் உள்ளன.அதில் முக்கியமான ஒன்று, (Golden Rule of interpretation) தங்க விதி என்பதாம். அதாவது சட்டத்தின் கூறுகளை அதனின் சாதாரண பொருள் கொண்டே புரிந்து கொள்ளுதல். சில நேரங்களில் அப்படி பொருள் கொள்ளுதல் கடினமாய் இருந்தால் அல்லது இயலவில்லை என்றால் மற்ற காரணிகளை வைத்து பொருள் கொள்ளுவர்.
இப்படி படித்து கொண்டிருக்கும் போதுதான் அந்த தொடர்பில்லா எண்ணம். அது இதுவே.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

கணியன் பூங்குன்றனாரின் இந்த பாடல் அனைவருக்கும் தெரிந்ததுதானே. முதல் இரண்டு வரிகளை நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்துகிறோம்.

இப்பாடலின் பொருள்
எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் சொந்தம்
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
இறப்பதில் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வாழ்வினை வெறுத்து  துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்
பிறந்து வாழ்வோரில்
பெரியோரை வியந்து போற்றுதலும் இல்லை
சிறியோரை இகழ்ந்து தூற்றுவது அதனிலும் இல்லை

பெரும் அறிஞர்கள் இப்பாடலை குறித்து பேசியுள்ளனர். பாடலின் பொருள் குறித்து ஏதும் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், பெரும்பாலோனோர் கணியன் பூங்குன்றனார் எழுதிய இப்பாடல் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாடல் எழுதினார் என்றும் எனவே 2000 ஆயிரம் ஆண்டுகளாய், தமிழ் பெருமக்கள் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற உயரிய பண்பாட்டினை பெற்றிருந்தனர் என்ற கருத்தை முன் வைக்கின்றனர்.

என் கருத்தில், நான் முன்னர் கூறிய (பொருள் கொள்ளுதலில்)தங்க விதியை (Golden Rule) பயன்படுத்தி இப்பாடலை படித்தால், குறிப்பாக”என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,” என்ற வரிகளை படித்தால் , யாதும் ஊரே,யாவரும் கேளிர்” என்ற பண்பாடு கணியன் பூங்குன்றனாரின் கருத்தல்ல,அவருக்கும் முன்னர் இருந்த தமிழ் சமூகம் ,அதனின் அறிஞர் பெருமக்கள் கண்டு, உணர்ந்து,கடைபிடித்து, அறிவுறுத்திய -பெரும் பண்பாகும் என்பது தெளிவு.அப்படியாயின் இந்த பண்பாடு 2000 ஆண்டுகளாய் தமிழ் சமூகம் கொண்டது என்பது தவறாகும்.அதற்கு முன்னரே பல நெடுங்காலம்,இந்த பெருமைமிகு பண்பாட்டை பெற்றது இச்சமூகம்.

“மின்னொடு வானம் தண்துளி தலைஇ
யானாதுகல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படூஉம்”, என்று பாடியிருக்கிறார்.

என் புரிதலில், தமிழாசிரியர்கள், இந்த வரிகளை மின்னலோடு, வானம் பொழியும் மழை, பூமியில் இறங்கி ஆறாய் உருவெடுத்து, வளைந்து நெளிந்து செல்லும் போதில், அதனில் பயணிக்கும் படகும் அவ்வாறே வளைந்து செல்வது போல் இயற்கையின்பாற் பட்டே, நம் வாழ்க்கையும் அமையும் என்ற கருத்தை கூறுகின்றனர். அது அனைவராலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒன்றாம். அதிலேதும் மாற்று கருத்தினை யாரும் சொல்லிட முடியாது.

ஆனால்,கணியனார்,”கல் பொருதுமிரங்கு மல்லல் யாற்று நீர் வழி”  என்று வெறும் ஆறு என்று குறிப்பிடாமல் ‘பேரியாற்று’ என்று ஏன் கூறினார் ? பெரும் ஆறு என்பதை குறிக்கவா என்று ஐயம் தோன்றிய போது நண்பர் விக்னேஷ் சீனிவாசனின் முகநூல் பக்கத்தில் படித்த பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது. அப்பதிவில் தற்போது முல்லை பெரியார் அணை அமைந்திருக்கும் பெரியாறு என்னும் ஆறே சங்க இலக்கியங்களில் பேரியாறு என்று அழைக்கப்பட்டதாய் கூறுகிறார். ஆங்கிலேயர் வருகையினால், உச்சரிப்பு வசதிக்காக பேரியாறு என்பது பெரியாறு என்று மாறியிருக்க வேண்டும்.



பேரியாறு  இன்றைய கேரள மாநிலத்தின் மிகவும் நீளமான ஓர் ஆறு. இதன் நீளம் 300 கி.மீ, இதில் 244 கி.மீ கேரளாவிலும், 56 கி.மீ தமிழ்நாட்டிலும் உள்ளது. இது தமிழகத்திலுள்ள சிவகிரி மலையின் சுந்தரமலை பகுதியில் உற்பத்தியாகிறது.
பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் சேரர்களின் முசிறித் துறைமுகம் (பட்டணம்) அமைந்திருந்தது. இந்தப் பேரியாற்றின் கரையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கி இயற்கைக் காட்சியைக் கண்ட செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

“நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப”
என்பது சிலப்பதிகாரம். (காட்சிக்காதை. 21-23)

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் சேரர் காலத்து ஒப்பந்தம் ஒன்று இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நகல் தற்பொழுது கரூர் அருங்காட்சியகத்திலும் உண்டு. இந்த ஒப்பந்தம் சேர நாட்டில் பேரியாறு (இன்றைய பெரியாறு) முகத்துவாரத்தில் இருந்த முசிறி (கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் அருகே இருக்கும் இன்றைய பட்டணம்) நகர வணிகருக்கும் எகிப்து நாட்டின் நைல் நதியின் முகத்துவார கிரேக்க வணிகருக்கும் போடப்பட்ட வணிக ஒப்பந்தம் ஆகும். கிரேக்க மொழியில் இரு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தில் தமிழ் வணிகர் கையெழுத்திட்டுள்ளார்.
அந்த ஒப்பந்தத்தின்படி பேரியாறு வழியாக முசிறி துறைமுகத்தில் இருந்து மரக்கலங்களில் சரக்குப் பொதிகள் ஏற்றப்பட்டு அவை செங்கடலில் எகிப்து நாட்டில் இருந்த மியோஸ் கார்மோஸ் (Myos Harmos) என்கிற துறைமுகத்துக்கு சென்றுள்ளன. அங்கே இருந்து கழுதைகள் மூலம் சரக்குகள் கிழக்கு சகாரா பாலைவனத்தை கடந்து நைல் நதிக் கரையில் இருந்த பண்டைய காப்போடோஸ் (Copotos) நகரை அடைந்தன. அங்கிருந்து நைல் நதி வழியாக அலெக்சாண்ட்ரியா நகரை அடைந்தன. அந்தப் பொதிகளின் மதிப்பு அலெக்சாண்ட்ரியாவின் ஒரு நீர்வழிச் சாலையை அமைக்க போதுமானது என்கிறது ஒப்பந்தக் குறிப்பு.

source: https://www.hindutamil.in/news/tamilnadu/37076-.html

மேலும் சங்க இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் பேரியாறு பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன அவற்றுள் சில,

கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று
நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல – அகநானூறு 62

பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் – அகநானூறு 35

நாள் தர வந்த விழு கலம் அனைத்தும்
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு  –
மதுரைக் காஞ்சி 696

மாற்றரும் தெய்வத்து கூட்டம் முன்னிய
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு
வருநர் வரையா செழும் பல் தாரம் – பதிற்றுப்பத்து
எனவே, கணியனாரின் பேரியாற்று என்ற சொல் தற்போதைய பெரியாறு ஆற்றை குறிக்கும் என பொருள் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. வரலாற்று அறிஞர்களும்,இலக்கிய பேராசிரியர்களும் இதன் உண்மை பொருள் தருவார்கள் என்று நம்புகிறேன்.

காலத்தினால் அளவிட முடியாத தமிழர் பண்பினை, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, பேரியாற்றில் துவங்கி எகிப்து, ரோமாபுரி மற்றும்  கிரேக்கம் வரை வணிகம் செய்த அந்த பெருமையை, தமிழ் பண்பாட்டை என்றும் பண்பாடுவோம்.
“திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின்,” என்ற வரிகள் இன்னொறு  செய்தியையும் தருகிறது.   
சட்டத்தில் பொருள் கொள்ளுதலில் , அதனில் பயன்படுத்திய சொற்றொடர்களை மட்டும் வைத்தே பொருள் கொள்ளுவர். சில வழக்குகளில் சட்டமியற்றிய அவையின் நோக்கம்(Intention of the Legislature) என்பதை ஆய்ந்து அதற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும் என்று வாதங்கள் வைப்பது உண்டு. அமெரிக்க, இங்கிலாந்து மற்றும் இந்திய நீதிமன்றங்கள் பெரும்பாலும் இதனை ஒப்புகொள்வதில்லை.

இருப்பினும் கணியன் பூங்குன்றனார், திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் என்று, அதற்கு முன்னர் அவர் எழுதிய வரிகளை தம் கருத்தாக கூறாமல், ஏன் அவை தமக்கு முன்னோர் கண்டு தெளிந்த கருத்துகளாக கூற வேண்டும்? எழுதியவரின் நோக்கம் என்னவாயிருக்கும்? தான் முன்னோர் சொன்ன கருத்துக்களை தன் கருத்துக்களாய் கூறாமல், அவர்களின் பங்களிப்பை போற்றி கூறுவதே தமிழர் மரபு. அதுவே, கணியனாரின் நோக்கமாக இருக்க வேண்டும்.தமக்கு முன்னரே, தமிழர் போற்றிய மரபு என்று நாம் அறிவதற்கே அவர், திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் என்று எழுதியிருக்க வேண்டும். இது தொடர்பாக ,மற்றொரு செய்தி.சில ஆண்டுகளுக்கு முன்னர் மேல சித்தாமூர் சமண ஆலயத்திற்கு, கலை மற்றும் வரலாற்று ஆர்வத்தினால் நண்பர்களுடன் சென்றிருந்த போது அங்கு  ஒர் கல்வெட்டின் நகலாக ஒர் பதாகையை பார்த்தேன்.அதில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் ,ஒலிக்கின்ற கழல்களை அணிந்த சோழ மன்னின் புகழ் மிக்க தேவியாகிய காடவர்கோன் பாவை ,இந்த நெடிய நிலப்பரப்பில் பெருமை பொருந்தி விளங்கும் சிற்றாமூரில் ,  முன்பு செய்யப்பட்ட அறத்தினை மீண்டும் நிலைப்பெறச் செய்து சமண அறங்கள் பெருக வழிவகை செய்தாள் என்ற மொழியாக்கத்துடன் எழுதப் பட்டிருந்தது.

முந்தய அறவழிகள் மட்டுமல்ல, எல்லா சமயங்களையும் ஒன்றாய் போற்றி அவற்றினை பாதுகாத்து வளர்ப்பதுவும் தமிழர் மரபு மற்றும் அறம் என்பது இதனால் தெளிவு. லெய்டன் செப்பேடுகள் என்று அறியப் படும் ராஜேந்திர சோழனின் குறிப்புகளாய் ராஜராஜ சோழன் புத்த ஆலயத்திற்கு வழங்கிய கொடைகளை காணலாம். முதலாம் குலோத்துங்கனும் தன் செப்பேட்டில் அதனை உறுதி செய்துள்ளார். அந்த செப்பேடுகளும் லெய்டன் அருங்காட்சியகத்தில்தான் உள்ளது. அந்த செப்பேடுகளை ஆனைமங்கலம் செப்பேடுகள் என்றும் அழைப்பர். அந்த செப்பேடுகளை தமிழகத்திற்கு கொண்டு வந்திட வேண்டும் 08/12/2022 அன்று நாடளுமன்ற மேலவையில், வேண்டுகோள் விடுத்துள்ளேன்.ஒன்றிய அமைச்சரும் அதற்கான நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பதிலளித்துள்ளார்.

இந்த நிலத்திலா மதத்தின் பெயரில் ஆட்சியாள முடியும்? கனவிலும் நடவாதன்றோ? கனவு காண அவர்களுக்கு உரிமையுண்டு. தமிழர் மரபினை காத்திட நமக்கு கடமையுண்டு.
ஒன்பது மாதங்கள் அதற்காய் உழைத்திட வேண்டாமா? தமிழர் மரபு, பண்பாட்டை காத்திட  தலைவரின்.  கட்டளைகளையேற்று  சேரனாய், சோழனாய்,பாண்டியனாய், பல்லவனின் பரஞ்சோதியாய் தேர்தல் களமாட வேண்டாமா? தூங்கி விட்டால் இனமழிக்கப்படுமென உணர வேண்டாமா?
பண் பாடும் அதே வேளையில் நம் கடமை மறவாமல்,களம் புக தயாராகுங்கள் தோழரே.

N.R. இளங்கோ.
நாடாளுமன்ற உறுப்பினர்.

நன்றி
முரசொலி

முதலாளித்துவத்தை வீழ்த்துவோம்- க.இரா. தமிழரசன்


நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 10

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும்- கார்ல் மார்க்ஸ்
நரேந்திர மோடி குசராத் முதல்வராக இருந்து இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது அவர் அதிகம் உச்சரித்த வார்த்தைகள் “வறுமையை ஒழிப்பேன், வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவேன், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவேன், கருப்புப் பணத்தை ஒழிப்பேன்” இவைதான்.

மேடைப்பேச்சில் மயங்கி மக்களும் வாக்களித்து மோடியை பிரதமர் ஆக்கினார்கள், ஆனால் இந்தியாவின் இன்றைய நிலைமை என்ன ?

1. உலக அளவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகள், அதை சரி செய்ய முடியாமல் தவிக்கும் நிலை குறித்து நியூ ஆக்ஸ்பாம் நிறுவனம் கள ஆய்வு நடத்தியது.  இந்த ஆய்வில் எடுத்துக் கொண்ட  152 நாடுகளில் இந்தியா 132 வது இடத்தில் உள்ளது.

2. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து வெளியிடப்பட்ட உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் ( 121 நாடுகள் அடங்கிய பட்டியலில்) 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. பாகிஸ்தான் (99), இலங்கை (64) வங்கதேசம் (84), நேபாளம் (81), மியான்மர் (71) போன்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் கூட இந்த குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன.

3. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) சார்பில் வேலைவாய்ப்பின்மை தொடர்பான விபரங்கள் 2021  டிசம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி 2021 டிசம்பரில் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 5.2 கோடி.  2020 டிசம்பரில் 3.87 கோடியாக இருந்த மொத்த வேலையற்றோர் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அறிவித்தது.

மேலும், இந்தியாவில் நகர்புறங்களில் வேலையின்மை நவம்பரில் 8.21 விழுக்காடாக இருந்தது டிசம்பர் மாதத்தில் 9.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கிராமப்புற வேலையின்மை கடந்த நவம்பரில் 6.44 சதவீதமாக இருந்த நிலையில், டிசம்பரில் 7.28 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2019-20 இன் படி, கிட்டத்தட்ட 3.2 கோடி மக்கள் விவசாயத் தொழிலுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்,

20-24 வயதுடையவர்களில் 38.41 % பேர் வேலையில்லாதவர்கள், 25-29 வயதுடையவர்கள் 12.71%, 15-19 வயதுடையவர்கள் 54.88% பேர் என்கிறது இந்த ஆய்வு.

உலக அளவில் முறைசாராத் தொழிலாளர்கள் 200 கோடி பேர் உள்ளனர். நைஜீரியா, பிரேசில் மற்றும் இந்தியாவில்தான் உலகிலேயே அதிக முறைசாராத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 40 கோடி பேர் இருப்பதாக இன்னொரு புள்ளிவிவரம் கூறுகிறது.

4. விலைவாசி கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. எடுத்துக்காட்டாக  2012 ஆம் ஆண்டு ஒரு கிலோ அரிசி சராசரியாக 30/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 60 /- ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ கோதுமை 24 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது கோதுமையின் விலை  45 ரூபாய்.  ஒரு கிலோ சுமார் 68 முதல் 70 ரூபாய்க்கு விற்ற உளுந்தம் பருப்பு, தற்போது 122 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. 76 ரூபாய்க்கு விற்ற பாசிப்பருப்பு  110 ரூபாய் வரை விற்பனையாகிறது. பாலைப் பொறுத்தவரை, பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு லிட்டர் 27 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஆனால் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலை 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணையைப் பொறுத்தவரை, ஒரு லிட்டர் 90 ரூபாய்க்கு விற்பனையான எண்ணெய் தற்போது, 180 ரூபாய் வரை விற்பனையாகிறது.

2012ஆம் ஆண்டு ஏப்ரலில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய்  என்ற அளவிலும் ஒரு லிட்டர் டீசல் 40 ரூபாய்  என்ற விலையிலும்  விற்பனையானது. ஆனால், தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102 என்ற விலையிலும் டீசல் ஒரு லிட்டர் ரூ97  என்ற விலையிலும் விற்பனையாகிறது

மத்திய அரசின் மானியத்திற்குப் பிறகு, நுகர்வோருக்கு ஒரு சிலிண்டர் சுமார் 410 ரூபாய்க்குக் கிடைத்தது. ஆனால், 2014க்குப் பிறகு மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு சிலிண்டரின் விலை 1,100 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

5. கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். ஆனால் நடப்பதோ வேறு.

சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையின் படி, இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் மொத்தம் ரூபாய் 30,500 கோடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார் 10,000 கோடி அதிகம் என்றும் 2020ஆம் ஆண்டில் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் ரூபாய் 20 ஆயிரத்து 700 கோடி இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் ஒரே ஆண்டில் மட்டும் 50 சதவீதத்திற்கு அதிகமாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.  இந்த தொகை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது இந்தியாவின் ஒரு புறம். இன்னொரு புறம் வேறு விதமாக உள்ளது.

உலகின் பெரிய செல்வந்தர்களின் பட்டியலான ஃபோர்ப்ஸ் பட்டியலில் 90களில் இந்தியாவிலிருந்து யாரும் இல்லை. 2000ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. 2017இல் இது 119 ஆக இருந்தது.  2022 இல் இந்த எண்ணிக்கை 166 ஆக உள்ளது. இவர்களின் சொத்து மதிப்பானது ஒரு நாளைக்கு ரூ.3,608 கோடி என்கிற அளவில் உயர்ந்து வந்திருக்கிறது.

இந்தியாவின் 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 660 பில்லியன் அமெரிக்க டாலர்களை (₹ 54.12 லட்சம் கோடி) தொட்டுள்ளது

இந்தியாவில் உள்ள பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதே சமயம் மக்கள் தொகையில் அடிமட்டத்தில் இருக்கும் 50 சதவீதம் மக்கள் ஒட்டுமொத்தமாகவே வெறும் 3 சதவீத செல்வத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.

மேலும், இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் மீது 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டாலே இந்தியாவில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்கும் பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியும் .

இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்கும் 2 விழுக்காடு வரி விதிக்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக 40,423 கோடி ரூபாய் அளவிலான தேவைப்படும் நிதியை திரட்ட முடியும்

நாட்டில் உள்ள முதல் 10 பணக்காரர்களின்  சொத்துக்கள் மீது ஒரு முறை 5 விழுக்காடு வரி விதிக்கப்பட்டால் 1.37 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும். இது 2022–-23 ஆம் ஆண்டிற்குச் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (ரூ. 86,200 கோடி) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் (ரூ.3,050 கோடி) மதிப்பிட்டுள்ள நிதி தேவையை விட 1.5 மடங்கு அதிக நிதியை திரட்ட முடியும்” என்கிறது.
 

ஏழை இந்தியக் குடும்பங்களின் ஆண்டு வருமானம், 2015-16-ல் இருந்த நிலையை விட அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் அதாவது, 2020-21-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக 53 விழுக்காடு சரிந்துள்ளது. இதே ஐந்தாண்டு காலக்கட்டத்தில் 20 விழுக்காடு பணக்காரர்கள் தங்களின் ஆண்டு குடும்ப வருமானத்தில் 39 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளனர் என்பதிலிருந்து இந்தியா ஏழைகள் வாழத் தகுதியற்ற, செல்வந்தர்கள் மட்டும்  தனித்துவமாக வாழும் சமத்துவமற்ற நாடாகவும் மோடி அரசு மாற்றியுள்ளது.

கார்ப்ரேட்களுக்கு லட்சக்கணக்கான கோடிகள் வரிச்சலுகையை கொடுப்பதன் மூலமும் ஏழை மக்களின் மீது கடுமையான வரிச்சுமையை ஏற்றுவதன் மூலமும் இந்த நாட்டை மோடி அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அறிக்கை கூறியது.

2017-2021 வரையிலான கௌதம் அதானியின் பெறப்படாத ஆதாயங்களின் மீதான ஒரே வரியானது, ஒரு வருடத்திற்கு ஐந்து மில்லியனுக்கும் அதிகமான இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களைப் பணியமர்த்த போதுமானதாக இருந்திருக்கும். இப்படி இந்தியா இரண்டு முகத்தோடு உள்ளது.
கார்ப்பரேட் கொள்ளையர்கள் மகிழ்ந்து வாழவும் ஏழைகள் வாழ்வதற்கே தகுதியற்றதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் கொள்ளையர்களே  அரசாங்கக் கொள்கைகளை தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் எதிர்காலம் ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையிலும்  பாட்டாளி வர்க்கம் முதலாளிகளுக்கு எதிராக எழாவிட்டால் மொத்தமாக அழிவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

தொழிலாளிகளைச் சுரண்டும், உழைக்கும்  மக்களை ஒடுக்கும் இந்த முதலாளி வர்க்கத்தையும், இந்த ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாக உள்ள அரசு களையும் நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

தன்னுடைய சுரண்டலை மறைக்க மதவெறியைத் தூண்டி இந்துத்துவ கூச்சலிடுகிறது மோடி அரசு.

எனவே, முதலாளிவர்க்கத்திற்கு முடிவுகட்டும் வேலையை தொழிலாளி வர்க்கம் தமது தலைமையில் செய்து முடிக்க வேண்டும். சாதி, மதம், இனம் கடந்த ஒற்றுமை இதற்கு தேவை. அதை நிச்சயம் பாட்டாளி வர்க்கம் செய்யும்.

(முற்றும்)

முதலாளிகள் – அரசியல்வாதிகள் கூட்டு- க.இரா. தமிழரசன்

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 9

சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும் – மாமேதை கார்ல் மார்க்ஸ்

இந்தியாவில் ஒரு கட்சி நடத்த வேண்டுமென்றால் அதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவை. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க அது தான் நியதி. அதுவும் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில் பெரும் நிதி தேவை. இந்த நிதியை அரசியல் கட்சிகள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தான் பெற்றுக் கொள்கின்றன. எனவே, அவர்களுக்காகச் செயல்பட வேண்டிய நிலை அரசியல்வாதிகளுக்கு, அந்தக் கட்சிகளுக்கு உருவாகிவிடுகிறது.

அதே போல், தங்களுக்கு சாதகமான கட்சி இருந்தால் தான் தங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை நாடாளுமன்றத்தில் இயற்றிக் கொள்ள முடியும், பெரும் ஒப்பந்தங்களைத் தங்கள் நிறுவனத்திற்குப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால்   தங்களுக்கு சாதகமான கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அந்தக் கட்சிக்கு கோடிக்கணக்கான நிதியை தேர்தல் நேரத்தில் நன்கொடையாக வாரி வழங்குகின்றனர். இது அவர்களுக்குள் ஒரு கூட்டை இயல்பாக உருவாக்கிவிடுகிறது.

அதை விட முக்கியம் இங்குள்ள முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் வளர்ந்து நிற்கின்றனர். எனவே, தலைமை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்மட்ட அதிகார வர்க்கத்தினர் மற்றும் பெரும் முதலாளிகள்  தங்களுக்குள் ஒரு வலை பின்னலை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர்.

ஒவ்வொருவரும் அவர்களுக்குள் ஒத்துழைத்து  கொள்கை வகுத்து பெரும் முதலாளிகளுக்கு கொளுத்த லாபங்களை வழங்குகின்றனர். அதன் மூலம்  தனிப்பட்ட முறையில் பல கோடி லஞ்சம் பெறுகின்றனர். தங்கள் கட்சிக்கும்  பல கோடி நிதியை தேர்தல் நன்கொடையாக பெற்றுக் கொள்கின்றனர்.

கார்பரேட்டுகள் சட்டவிரோதமாக அடிக்கும் கொள்ளையில் தங்களுக்கான பங்கை சட்டப்படியே பெற்றுக் கொள்ள  கருப்புப் பணம் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. ஒவ்வொரு கட்சியின் கார்ப்ரேட் சேவையைப் பொறுத்து கார்ப்ரேட்கள் அவர்களுக்கு நிதி வழங்குகின்றன.

இப்படித்தான்  பாரதிய ஜனதா கட்சி, கங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் நிதியாக பல கோடி ரூபாய்களை கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெறுகின்றன.

2012-13 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்தில்  ரியல் எஸ்டேட் துறையினரிடம் இருந்து 105.20 கோடிகளும், சுரங்கம், கட்டுமானத்துறை, ஏற்றுமதி/இறக்குமதி துறையினரிடம் இருந்து 83.56 கோடிகளும் இரசாயன மற்றும் மருந்து நிறுவனங்களிடம் இருந்து 31.94 கோடிகளும் பாஜக பெற்றுள்ளதாக தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 2019-20 நிதியாண்டில் மட்டும் பாரதிய ஜனதா, 2025 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து  720 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்ற 139 கோடி ரூபாயைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம். காங்கிரஸ் கட்சி 154 நிறுவனங்களிடமிருந்து 133 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ஒன்றிய பாஜக அரசால் தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட எஸ்.பி.ஐ (SBI) வங்கி கிளைகளில், ரூ. ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம், 10 லட்சம், கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும்.

தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுனங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெறலாம் என்று கூறப்பட்டது.

2019-20 நிதியாண்டில் இந்தத் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதிய ஜனதா திரட்டிய மொத்த நன்கொடை 2,555 கோடி ரூபாய். இது 2018-19 நிதியாண்டில் பாரதிய ஜனதாவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த 1,450 கோடி ரூபாயைக் காட்டிலும் 75 விழுக்காடு அதிகம். ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரஸிற்கு 2018-19 நிதியாண்டில் கிடைத்த நன்கொடையை விட 2019-20 நிதியாண்டில் 17 விழுக்காடு குறைவாகவே கிடைத்துள்ளது.

2018-19-இல் தேர்தல் பத்திரங்கள் மூலம் 383 கோடி ரூபாய் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2019-20 நிதியாண்டில் 318 கோடி ரூபாய் என குறைவாகவே பெற்றுள்ளது.

மிகப்பெரிய தேர்தல் அறக்கட்டளைகளில் ஒன்றான ப்ரூடென்ட் எலெக்டோரல் டிரஸ்ட், பாஜகவுக்கு ரூ. 209.00 கோடி நன்கொடையாக அளித்துள்ளது, இது 2019-20ஆம் ஆண்டில் ரூ.217.75 கோடியை வழங்கியது, அதேநேரம், ஜெயபாரத் எலெக்டோரல் டிரஸ்ட் தனது மொத்த வருமான ரூ.2 கோடியை 2020-21ல் பாஜகவுக்கு வழங்கியுள்ளது.

2021 – 2022ம் ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற வருமானம் மொத்தமாக ரூ.3,289.34 கோடி, இதில் ஆளும் பா.ஜ.க கட்சி மட்டும் ரூ.1917.12 கோடி பெற்றுள்ளது. இந்த தொகையில் இருந்து ரூ.854.46 கோடியை செலவு செய்துள்ளதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி ரூ.541.27 கோடி வருமானம் பெற்றும் அதில் ரூ.400.41 கோடியை செலவு செய்துள்ளது. கணக்கில் கொண்டுவரப்பட்ட தொகை தான் இவ்வளவு. அப்படி என்றால் கணக்கில் வராத பணத்தின் மதிப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்தப் பணத்தை பயன்படுத்தி தான் தேர்தலில் வெற்றி பெற்று இவர்கள் ஆட்சி அமைக்கிறார்கள்.

பாரதிய ஜனதா பெற்றுள்ள  ரூபாய்க்கும், காங்கிரஸ் பெற்ற  ரூபாய்க்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே கார்ப்பரேட்டுகள் பாரதிய ஜனதா கட்சியை எவ்வளவு தூரம் நம்புகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

2025 கார்பரேட் நிறுவனங்கள் பா.ஜ.க. வுக்கும் 134 கார்பரேட் நிறுவனங்கள் காங்கிரசுக்கும் நிதி உதவி அளித்துள்ளதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக மோடியின் பா.ஜ.க. உள்ளதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல் தனிப்பட்ட ஒருவரிடமிருந்து நிதி பெற்றிருந்தால், அப்படி நிதி வழங்கியவர்களின் பெயர் மற்றும் தொகையின் தரவுகளை நிதி ஆண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற  சட்டத்தை  தேர்தல் பத்திரத் திட்டம் – 2018 மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. இதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை பா.ஜ.க தேர்தல் நிதியாக பெற்று வருகிறது.

கட்சிக்கு தேவையான நிதியை  தங்கள் கைவசம் உள்ள துறைகளைப் பயன்படுத்தி எப்படி மிரட்டி பா.ஜ.க வசூலிக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம் குல்மார்க் ரியல் எஸ்டேட் நிறுவனம்.

2020 சனவரியில் பிரபல கட்டுமான நிறுவனர் சுதாகர் ஷெட்டிக்கு சொந்தமான குல்மார்க் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனை முடிந்தவுடன் குல்மார்க் நிறுவனம் சார்பாக பாரதிய ஜனதாவிற்கு 20 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது.

2014-2015 ஆண்டில் RKW டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடி நிதியாக நன்கொடை பெற்றுள்ளனர். இந்நிறுவனம் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீமின் நெருங்கிய கூட்டாளி, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி இக்பால் மிர்ச்சி என்றழைக்கப்படும் இக்பால் மேமன் அவருடன் தொடர்புடையது.

சன்பிளிங்க்(SUNBLINK) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு  பா.ஜ.க. ரூ. 2 கோடி ரூபாய் அந்த நிறுவனத்திடமிருந்து தேர்தல் நிதி வசூலித்துள்ளது. ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ. 2 கோடி நன்கொடை அளித்துள்ளது.

தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 2016-17ம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ. 7.5 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

எந்த நிறுவனத்திடம் நிதி பெற வேண்டுமோ அந்த நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையை மோடி அரசு சோதனைக்கு அனுப்பி விடும். அதே ஆண்டு பல கோடி ரூபாய்  நிதி தானாகவே பா.ஜ.க. கட்சி அலுவலகத்திற்கு தேடி வரும்.

தமக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு, அவர்களின் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அனைத்து வகையான தொழில் முறை உதவிகளையும் செய்தும் பா.ஜ.க முதலாளிகளிடம் கூட்டு வைத்துக் கொண்டுள்ளது போலவே மிரட்டியும் பா.ஜ.க பணம் சேர்க்கிறது என்பதற்கு மேல கண்டவையே உதாரணம்.

இந்த அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், மிக பெரும் கார்ப்பரேட்டுகளின் கூட்டு நாட்டை  எந்தளவுக்கு திவாலாக்கியுள்ளது என்பதற்கு சான்று தான் அதானியின் மீதான ஹிண்டன்ஸ் பர்க் அறிக்கையும் அதற்கு பின் உண்டான விளைவுகளும்.

இந்தக் கூட்டணியை குரோனி கேபிடசலிசம் (சலுகை சார் முதலாளித்துவம்)என்று மேற்கத்திய நாடுகளால் அழைக்கப்படுகிறார்கள்.

இந்த சலுகைசார் முதலாளிகளால் தற்போது இந்தியா கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு மிக பெரும் செல்வாக்கு படைத்தவர்களாக இந்த முதலாளிகள் உருவெடுத்து உள்ளனர்  அரசின் வருடாந்திர பட்ஜெட்டையும் அதன் முக்கிய அம்சங்களையும் தீர்மானிப்பதே இவர்கள் தான். இதனால் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை குறைக்கப்படுகின்றன சில திட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன. இலவச மானியங்கள் ஒழிக்கப்படுகின்றன. இது ஏழைகளை மேலும் ஏழையாக்குகின்றது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இந்த முதலாளிகள் வாங்கும் லட்சக்கணக்கான கோடி கடன்களை இவர்கள் திரும்ப செலுத்துவதே இல்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் இந்திய வங்கித்துறை  பல லட்சம் கோடி நட்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த நட்டம் ஏழைகள் வாங்கும் கடனுக்கான வட்டித்தொகை அதிகரிப்பதன் மூலம் ஈடுகட்டப்படுகின்றன. இதனால் பெரும் கடன் சுமையால் ஏழைகள் திண்டாடுகின்றனர்.

லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் கூட தனியாருக்கு தாரைவார்க்கப்படுகின்றன. இதனால் கடுமையான வேலை இழப்பு ஏற்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காக விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. நாட்டின் கனிமவளங்கள் சூறையாடப்படுகின்றன.

தொழிற்சங்க வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

இப்படி எண்ணிலடங்கா ஒடுக்குமுறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அரசியல்வாதிகளையும் , அதிகாரவர்கத்தையும் தங்கள் கைப்பிடியில் வைத்துக் கொண்டு இந்த நாட்டை கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். 

மோடி பதவியேற்ற நாள் முதல்  ஒட்டுமொத்த இந்தியாவும் கார்ப்ரேட்களின் கைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டணியை நாம் முறியடிக்காவிட்டால் எதிர்காலம் சொல்லொண்ணா துயரத்தோடு முடிவுறும்.

(தொடரும்)

அறியப்படாத இந்துமதம்- நூல் விமர்சனம்- சுமதி விஜயகுமார்.

கல்லூரி முடித்த சமயம், வீட்டில் அண்ணன் வாங்கி வைத்த ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ நூல் இருந்தது. போர் அடித்ததால் படித்து முடித்தேன். நூலில் என்ன இருந்தது என்பது நினைவில் இல்லை. ஆனால் சுவாரஸ்யமாக இருந்தது என்று மட்டும் தெரியும். இப்போது படித்தால் அதில் கண்ணதாசன் என்னென்ன காமெடி பண்ணியிருக்கிறார் என்று தெரியும். ஒருவேளை அந்த நூல் இன்னொரு முறை கிடைத்தாலும் கூட படிப்பேனா என்று தெரியவில்லை. படிக்க வேண்டுய நூல்களின் பட்டியல் மிக அதிகமாய் இருக்கிறது. கண்ணதாசனின் அந்த நூலுக்கு பதிலடியாக தோழர் மஞ்சை வசந்தன் எழுதிய ‘அர்த்தமற்ற இந்து மதம்’ வெளியாகி இருக்கிறது. அந்த நூலினை படிக்கும் சந்தர்ப்பத்தை நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் அதுவும் ஒன்று. அது ஒருபுறம் இருக்க, கண்ணதாசனின் நூலுக்கு இந்த நூல் மிகச்சரியான பதிலாக இருக்கும் என்று அதை படிக்க படிக்க தோன்றியது.

‘அறியப்படாத இந்து மதம்’. நூலாசிரியர் திராவிடர் கழகத்தை சேர்ந்தவரோ நாத்திகவாதியோ அல்ல. சமூக ஊடகங்களில் பலமுறை பேட்டி கொடுத்த தினகரன் செல்லையாவை பார்த்திருப்பவர்களுக்கு தெரியும் அவர் ஆத்திகவாதி என்று. ஒரு ஆத்திகவாதியான பகுத்தறிவுவாதி, தன் மதத்தை சரியான தராசில் வைத்து பார்த்தல் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்த நூல். எந்த வித விருப்பு வெறுப்பும் இல்லாமல், எந்த ஒரு முன்முடிவும் இல்லாமல் அந்த நூலை படித்தால் நீங்கள் நாத்திகவாதியாக எல்லாம் மாற மாட்டிர்கள். ஆனால் அடுத்த முறை கோவிலுக்கு செல்லும் போது கொஞ்சம் நெருடல் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இதெல்லாம் ஹிந்து மதத்தின் பெருமையாக சொல்லப்படுகிறதோ அதை எல்லாம் ஆதாரங்களுடன் சுக்குநூறாக உடைத்திருக்கிறார். தலையில் இருந்தும், தோளில் இருந்தும், தொடையில் இருந்தும் காலில் இருந்தும் பிறந்த(?) மனிதர்களை வகைப்படுத்தும் வேதத்தை அம்பலப்படுத்தியுள்ளார். செல்லும் இடமெல்லாம் சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் ஆளுநர் RN ரவி, என்றைக்காவது அந்த சனாதனம் என்ன சொல்கிறது என்று பேசி இருக்கிறாரா? பல குழந்தைகளின் உயிரையும் வாங்கும் ‘நீட்’ பரீட்சை அந்த சனாதனத்தின் நீட்சி என்பதை அறிந்து கொள்ள இந்த நூலை படித்தே ஆக வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வருவதை தடுக்க ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சொல்லும் ஹிந்து மதம், அந்த கோவில்கள் மற்ற மக்களுக்காகவேனும் உள்ளதா என்றால், இல்லை என்று தான் வரலாறு சொல்கிறது. பிறகு யாருக்கானது கோவில்கள்? அரசனுக்கும், பார்ப்பனர்களுக்கும் ஆனவை. அங்கு தான் நாம் positive vibes ஐ தேடி செல்கிறோம். அதனால் என்ன, உள்ளே கடவுள் இருக்கிறாரே அதனால் செல்கிறோம் என்று நீங்கள் கூறுவீர்களேயானால், ஒவ்வொரு நாளும் சூத்திரர்கள் கோவிலுக்குள் சென்று தீட்டு ஏற்படுத்துவதால் பூஜை என்னும் பெயரால் தீட்டு கழிப்பதை அறிந்தால் எந்த சுயமரியாதை உள்ள நாத்திகவாதியும் இன்னொரு முறை அந்த கோவிலுக்குள் செல்ல தயங்குவான்.

வேதங்களில் மட்டுமில்லை, சிவபுராணத்தில், மஹாபாரதத்தில் பெண்களை இதற்கு மேலும் இழிவு படுத்த முடியுமா என்னும் அளவிற்கு, கொச்சையான செய்திகள் கொட்டி கிடக்கின்றன. ஒரு பெண்ணை இந்த மத நூல்கள் கேவலப்படுத்துவதை போல, எந்த திரைப்படமும் கூட கேவலப்படுத்தியதில்லை. ஒரே கடவுளாகிய சிவபெருமானின் லிங்க உருவம் ஒவ்வொரு கோவிலுக்கும் மாறுபடுகிறது. ஏன் என்று கேட்டால் அதற்கு ஒரு சிவபுராண கதையை சொல்வார்கள். உண்மையான காரணத்தை இந்த நூல் விவரிக்கிறது. அந்த அத்தியாயத்தின் தலைப்பு ‘சிவலிங்கத்தில் சதி ….sorry …சாதி’. தலைப்பே பதில் கொடுத்துவிடுகிறது. ஹிந்து மதம் என்பது சாதியை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதை இதை விட வேறு எப்படி விளக்க முடியும்!

ஹிந்து மதம் அஹிம்சை மதம். ஆனால் மிருகங்களை மட்டும் கொஞ்சமாக சித்ரவதை செய்து யாகம் வளர்க்கும் அவ்வளவு தான். சைவர்கள் கொண்டாடும் பெரியபுராணத்தில் அடிக்கும் ரத்த வாடை , படிக்கும் போதே நம் கைகளிலும் ஒட்டி கொள்ளும். மண், மரம் , கல், உலோகம் , கோவில் , தெய்வம் என்று ஹிந்து மதமெங்கும் ஜாதியை தவிர வேறேதும் இல்லை.

என்னங்க நீங்க , சும்மா அடுக்கிகிட்டே போறீங்க , இதற்கெல்லாம் ஆதாரம் என்ன என்று கேட்டால் , இந்த நூலில், இந்த பக்கத்தில், இந்த வரியில் இருக்கிறது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். இந்த நூலிலேயே, எல்லா ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. நூலில் பாதி ஆதாரங்களை கொண்ட பக்கங்கள் தான்.

இப்படி ஒரு நூலிற்கு எதிர்ப்பு வரவில்லை என்றால் , அந்த நூலுக்கு தான் என்ன மதிப்பு. இந்த முறை எதிர்த்தது பிஜேபி இல்லை. சிட்னி தமிழ் மன்றத்தில் இந்த நூலின் பற்றி நூலாசிரியரை பேச விடாமல் தடுக்க பார்த்தது, நாம் தமிழர் தம்பிகள். தூய தமிழ் தேசியம் யாருக்கானவர்கள் என்பதையும் சேர்த்தே இந்த நூல் அம்பலப்படுத்தி இருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

இது வெறும் பாகம் 1 தான். இரண்டாம் பாகத்திற்கு நாத்திகர்களும் , ஜாதி மறுப்பாளர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறோம்.

மகிழ்ச்சியான மகளிர் தினம்- நம் கடமை முடிந்தது- சுபத்ரா…

எதோ பண்டிகை நாள் போல Happy Women’s Day னு சொல்லிகிட்டு திரியும் மக்களை பார்த்தால் பாவமா இருக்கு. இப்படி பெண்கள் தினங்கள் வைக்க காரணம், பெண்கள் பிரச்சினையின் தீவிரத்தை பற்றி பேசுவதற்காக.

இன்னைக்கு நாம் பார்க்கும் உலகம் ஆண்களே ஆண்களால் ஆண்களுக்காக கட்டமைத்த உலகம். இங்கே பெண் ஆணுக்கு சேவை செய்யும் வேலைக்காரியாகவே இருக்கணும். இந்த கட்டமைப்பு ஏன் இப்படி காலம் காலமா தொடருதுன்னா, இங்கே எல்லா முடிவையும் எடுப்பவர்கள் ஆண்கள். சமூகத்தில் வேலைக்காரியாக, வீட்டின் தலித்தாக பெண்கள் இருப்பதும், முடிவெடுக்கும் இடங்களில் 97% ஆண்கள் இருப்பதுமே நிஜம். ஜனத்தொகையில் 50% இருக்கும் பெண்கள், வெறும் 3% க்கும் குறைவாகவே முடிவெடுக்கும் இடங்களில் இடம்பெற்றுள்ளனர். குடும்பத்தின் முக்கிய முடிவுகளை ஆண்களே எடுப்பதில் ஆரம்பித்து, கிராமம் பஞ்சாயத்து (தேர்ந்தெடுத்த பெண் பஞ்சாயத்து தலைவர் பாத்திரம் விளக்குவார், அவரின் கணவர் அந்த பதவி முடிவுகளை எடுப்பார்).

மதங்கள், கோயில், மசூதி, சர்ச்சுகள், மடங்கள், கடவுள்கள், கார்ப்பரேட்டுகள், தொழில்கள், முதலீட்டாளர்கள், பத்திரிகை, தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், சினிமா, ரேடியோ, கல்வித்துறை (70% ஆசிரியர்கள் பெண்களாக இருந்தாலும், கல்வி பற்றிய முடிவெடுக்கும் இடங்களில் பெண்கள் 2% கூட இல்லை), விளையாட்டுத்துறை, விவசாயத் துறை, விஞ்ஞானம்,IAS IPS அதிகாரிகள் (90% ஆண்கள்), மருத்துவம், அரசியல் கட்சிகள் (கட்சி எதிலும் முடிவெடுக்கும் குழுக்களில் 50% பெண்கள் இல்லை, பெரும்பாலும் 98% முதல் 100% வரை ஆண்களே இருக்கின்றனர்), சட்டமன்றம், மந்திரிசபை, பாராளுமன்றம், பொருளாதார முடிவெடுக்கும் குழுக்கள், வங்கிகளின் போர்டுகள் என அனைத்து இடங்களிலும் 97% ஆண்களே அமர்ந்து முடிவெடுக்கிறார்கள்.

இதை விட கொடுமை, சமூக அமைப்புகள், இயக்கங்கள், சமூக ஆர்வலர் குழுக்கள், தலித் கம்யூனிஸ்டட் பெரியார் இயக்கங்கள் அமைப்புக்கள் என அனைத்துமே 90% ஆண்களே முடிவெடுக்கும் இடங்களில் வியாபித்து இருக்கின்றனர். இந்த அனைத்து முடிவுகளும் ஒட்டு மொத்த சமூகத்தையும், வடிவமைக்க கூடிய முடிவுகள். உதாரணமாக சட்டசபையில் 50% பெண்கள் இருந்தால், டாஸ்மாக் வந்திருக்குமா? எந்த அளவுக்கு பெண்களை அவர்களின் 50% இடத்தில் இருந்து 3% இடத்துக்கு ஒதுக்கி வைத்ததன் மூலம் நமது அடுத்த தலைமுறையே வீணாகிறது என்று கவனியுங்கள்.
ஏன் பெண்கள் முடிவெடுக்கும் இடங்களில் 50% இல்லை?

படிப்பதில் வேலையில் எல்லாவற்றிலும் பெண்கள் மிகச்சிறப்பாக ஆண்களை விட அதிக மதிப்பெண்ணுடன் மிளிர்வதை பார்க்கிறோம். ஆக இது நிச்சயமாக திறமை குறைபாட்டினால் அல்ல.

உண்மையான காரணம்‌ என்ன?

நாம் பெண்களை வீட்டில் சிறைவைத்து இருக்கிறோம். யார், தான் இருக்கும் இடத்தை தான் முடிவு செய்யவில்லையோ, யார் தான் இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்று வர அனுமதி பெற வேண்டுமோ, யார் எத்தனை மணிக்கு வெளியே போய் வர வேண்டும் என்று தான் முடிவு செய்ய முடியவில்லையோ, அவரை சிறைக்கைதி என்றும், அவர் இருக்கும் இடத்தை சிறை என்றும் சொல்கிறோம். பெரும்பாலான பெண்கள், வீட்டில் சிறையில் இருக்கின்றனர். ஆண்களை விட கம்மியாக படிக்க வேண்டும், கம்மியாக சம்பாதிக்க வேண்டும், குறைவாக புகழடைய வேண்டும் etc etc.. தன் வாழ்க்கை இணையை யாரோ நிர்ணயிப்பார்கள். 25 வயதில் தனது துறையில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும் கணவனுடன் வேறு ஊருக்கு வேறு வேலை பார்த்து கொண்டு அல்லது வேலை விட்டு விட்டு போக வேண்டும். புது இடம் புது மனிதர்களுடன் வாழ்க்கையை புதிதாக துவங்கி ஒரு Comfortable Zoneக்கு வருவதற்குள் குழந்தைகள் அப்படி இப்படி என்று பத்து வருடம் ஓடி மீண்டும் தனது துறைக்குள் கால் பதிப்பதற்குள் தனது துறையை சேர்ந்த சக ஆண்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் ஒரு தனிச்செயலாளருடன் தனது துறையில் மிக வேகமாக முன்னேறி இருப்பார்.

வீட்டையும் தனது கனவையும் இரண்டு கைகளில் பிடித்தபடி முன்னேற, தனது துறையில் இருக்கும் ஆண்களும் வீட்டில் இருக்கும் ஆண்களும் விடுவதே இல்லை. அவளின் தன்னம்பிக்கை குலையும்படி அலுவலகத்தின் ஒவ்வொரு சூழலிலும் பேசுவதை 90% ஆண்கள் தவறாமல் செய்கின்றனர். இப்படி செய்து தனது 97% முடிவெடுக்கும் இடங்களை ஆண்கள் தக்கவைத்துக் கொண்டு உள்ளனர்.

பெண்களின் மூளை ஆண்களை விட வேகமாக செயல்படுவதாகவும், மேலாண்மை திறன்களாக கருதப்படும் 19 குணங்களில் 17 குணங்கள் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக ஆய்வுகள் கூறுகின்றன. வெறும் 13% பெண்கள் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் இருந்தாலே போர்கள் குறைவதாக கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறு மூளை, வெவ்வேறு ஹார்மோன்கள். ஆண், 10 நிற ஷேடுகளை பார்க்க முடிந்தால் பெண்ணால் அதே காட்சியில் 35 நிற ஷேடுகளை பார்க்க முடிகிறது. வெறும் பார்வையிலேயே மூளையின் வித்தியாசம் இப்படி இருக்கும் போது, இன்னும் எத்தனை எத்தனை ஆணால் பார்க்க முடியாத விஷயங்களை பெண் பார்க்கிறாளோ தெரியாது. ஒரே சமயத்தில் பல வேலைகள் செய்ய பெண் மூளையால் முடியும். பெண்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாகவும் அதிக வேலையாட்கள் வேலையில் தொடர்வதாகவும் தரவுகள் சொல்கின்றன.

ஒரு எலியிடம் போய் யாரும் நீ எனக்கு நிகரில்லை நீ என்னை விட குறைவு உன்னை நான் பாதுகாக்க வேண்டும் அறிவுரை சொல்ல வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் பெண்களிடம் நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம், ஆணை விட பெண் கீழே கீழே என்று. குழந்தையில் இருந்தே ஒரு உளவியல் தாக்குதலை குடும்பமாக சேர்ந்து அவள் மீது நடத்துகிறோம். சுதந்திரம் சமத்துவம் என்ற இந்திய அரசியலமைப்பு சட்ட தத்துவங்களை வீடு முதல் சுடுகாடு வரை எல்லா இடங்களிலும் அவளுக்கு மறுத்தே வந்திருக்கிறோம். ஒரு தலித்தை அடித்த வீடியோ போட்டால், அனைவரும் உச்சு கொட்டுவார்கள் ஆனால் ஒரு பெண்ணை அவளின் குடும்ப ஆண் அடித்ததாக வீடியோ வந்ததில்லை. குடும்ப பிரச்சினையை வெளியே சொல்லி விட்டதாக அந்த பெண் சமூகத்தால் கடிந்து கொள்ளப்படுவாள்.

தாயாக தாரமாக தமக்கையாக இருப்பதாக ஒவ்வொரு பெண்கள் தினத்திலும் உளரி கொட்டாமல், அது எத்தகைய திறமைவாய்ந்த பெண்களை சமூக பொறுப்புக்களை ஏற்பதில் இருந்து தடை செய்து இருக்கிறது என்று சிந்தியுங்கள். Cooking Cleaning Childcare என்ற 3C யையும் ஆண்கள் சரிசமமாக பிரித்து, பெண்களின் கனவுகளை நிறைவேற்ற முழுதுணையாக இருப்பதன் மூலமே, நாம் நம் பிள்ளைகளுக்கான சிறந்த சமூகத்தை அமைக்க முடியும். இல்லை என்றால், இதே வன்முறை வன்புணர்வு சாராயம் சுரண்டல் இவற்றை தான் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.

சுபத்ரா, India Younited.9894150527


கல்வி, நீதியை காவு வாங்கும் சாதி- எவிடென்ஸ் கதிர்

பக்கத்தில் வராதீர்கள்.நாற்றம் அடிக்கிறது.சாக்கடை நாற்றம்.படிக்க வரிங்களா? யாரையாவது காதலித்து இழுத்து கொண்டு போக போறிங்களா? உங்கள் ஆளுங்களுக்கு எதற்கு படிப்பு? உங்களை பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.

இந்த வார்தைகளை சொன்னது ஏதோ ஒரு சாதி இயக்கத்தின் சாதி வெறியன் அல்ல.பள்ளிக்கூடத்தின் ஆசிரியை.இதனால் மன ரீதியாக வேதனை அடைந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரண்டு தலித் மாணவிகள், கடந்த 15 பிப்ரவரி 2023 அன்று பள்ளிக்கூடத்தின் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து உள்ளனர்.

சின்னாளப்பட்டி தேவாங்கர் – பெண்கள் உயர் நிலை பள்ளிக்கூடத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.சிகிச்சை எடுத்துவரும் இரண்டு தலித் மாணவிகளையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சந்தித்தேன்.இந்த துயரம் நேற்று இன்று நடக்கவில்லை.கடந்த இரண்டு மாதமாகவே நடந்து வருகிறது.மற்ற மாணவிகளிடத்திலும் எங்களிடம் பேச கூடாது.அவர்களிடம் பேசினால் கெட்டு போய்விடுவீர்கள். அவர்கள் எல்லாம் காலணியிலிருந்து வருபவர்கள்.அவர்கள் மீது நாற்றம் அடிக்கும் என்று கூறி கொண்டே இருப்பார்.எங்களது மகிழ்ச்சியை நிம்மதியை முற்றிலும் அந்த ஆசிரியர் குலைத்து விட்டார். நாங்கள் அருகில் சென்றால் கிட்டே வராதீர்கள் என்று கூறி தள்ளி நிற்பார்.எவ்வளவு காலம் பொறுத்து கொள்ளுவது? இந்த அவமானத்தை எதிர்கொண்டு எப்படி உயிர் வாழ்வது? விளையாட்டு போட்டியில் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வாங்கினாலும் எங்களை பாராட்ட மாட்டார்.அடுத்த நிலை விளையாட்டில் எங்களை விளையாட அனுமதிக்க மாட்டார் என்றும் கூறிய அந்த குழந்தைகளை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தேன்.இதுவரை சம்பந்தப்பட்ட ஆசிரியை கைது செய்யப்படவில்லை.

அவர்கள் வாசிக்க கூடிய தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள மற்ற மாணவிகளிடத்திலும் விசாரித்தேன்.சில சமயம் அந்த ஆசிரியை கோபத்தில் கன்னடத்தில் திட்டுவார்.அந்த வார்த்தைகள் புரியாது.ஆனால் பறைச்சி ,சக்கிலிச்சி என்று சாதியை கூறுவார் என்கிற குற்றச்சாட்டும் வைக்கின்றனர்.இதனை கன்னடம் எதிர் தமிழ் என்று எடுத்து கொள்ள கூடாது.இந்த ஆசிரியர் மற்ற பிற்படுத்தப்பட்ட தமிழ் சாதி மாணவர்களிடம் கண்ணியமாகத்தான் நடந்து கொண்டு உள்ளார்.

இந்த பள்ளிக்கூடத்தில் 48 ஆசிரியர்கள் உள்ளனர்.இதில் ஒருவர் கூட தலித் ஆசிரியர்கள் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.கல்வி கூடங்கள் சாதி கூடாரங்களாக உள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது.பள்ளிக்கூடம் மட்டும் அல்ல.கல்லூரிகளும் அப்படிதான் இருக்கின்றன.சவ்ராஸ்ட்ரா கல்லூரி,யாதவர் கல்லூரி,மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி,வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி இப்படி பல்வேறு சாதி பெயர்களில் மதுரையில் கல்லூரிகள் மட்டும் அல்ல.பள்ளிக்கூடங்களும் உள்ளன.தமிழ் நாட்டில் எல்லா இடங்களிலும் இந்த அவலம்தான்.தமிழக அரசு பேருந்துகளில் இருந்த சாதி அடையாளத்தை உத்தரவு போட்டு ஒழித்த தமிழக அரசு கல்வி கூடங்களில் தாங்கி இருக்கும் இந்த சாதி அடையாளத்தை எப்போது ஒழிக்க போகிறது.தேவாங்கர் செட்டியார் பள்ளிக்கூடம் என்று வருகிறபோது இயல்பாகவே அந்த சாதியின் பெருமிதமும் ஆதிக்கமும் அங்கு மேலோங்கி நிற்கிறது.எந்த சாதி பெயரை தாங்கி நின்றாலும், அது எல்லா நிலைகளிலும் தலித் மாணவர்களையே ஒடுக்குகிறது என்பதுதான் உண்மை.

காடு இருந்தால் பறித்து கொள்ளுவார்கள்.பணம் இருந்தால் பிடுங்கி கொள்ளுவார்கள்.கல்வியை பறிக்க முடியாது என்று அசுரன் படத்தில் வசனம் வரும்போது எல்லோரும் ஓங்கி கைகளை தட்டினோம் .ஆனால் சாதி கல்வியை மட்டும் அல்ல உயிரையும் பறிக்கிறது.

கல்வி என்பது எழுத்து அறிவு மட்டும் அல்ல.அது சமத்துவ பண்பு என்பதை எப்போது சொல்லி கொடுக்க போகிறோம்.ஆகவே காடு,பணம்.கல்வி எல்லாவற்றையும் பறிக்க முடியும்.மானுடத்தையும் சமத்துவத்தையும் பறிக்க முடியாது என்கிற நீதி கல்வி வளர்ந்தால்தான் சாதி கல்வி ஒழியும் .

எவிடென்ஸ் கதிர்

கைலாயத்தை பெயர்த்த இராவணன்- விக்கி கண்ணன்

இன்றைய காலத்தில் இராவணன் என்று சொன்னாலே நம்மில் பலருக்கும் சீதையை கடத்திச் சென்றது ஞாபகத்துக்கு வந்துவிடுகிறது. ஆனால் பக்தி இயக்கக் காலத்தில் இராவணன் என்று சொன்னால் தேவார மூவருக்கு இராவணன் கைலாயத்தை பெயர்க்க முற்பட்ட காட்சி தான் நினைவுக்கு வந்திருக்கிறது. அதன் தாக்கத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தனது பதிகங்களில் முறையே பத்தாவது மற்றும் எட்டாவது பாடலாக பல இடங்களில் இராவணனைப் பற்றி பாடியுள்ளனர். ஆனால் எங்குமே வால்மீகி இராமாயணக் காவியத்தின் பிரதிபலிப்பு இல்லை. மாறாக வால்மீகி இராமாயணக் காவியத்தில் இடம்பெறாத ஒரு சம்பவமே தேவாரத்தில் வெளிப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (வால்மீகி இராமாயணத்தின் உத்தர காண்டம் பிற்சேர்க்கை)

இராவணன் ஒரு சிவபக்தன். தனது பக்தியை மெச்சும் விதமாக கைலாய மலையை பெயர்த்து தான் ஆளும் இலங்கைக்கு கொண்டு செல்ல முற்படுகிறான். இராவணனது நோக்கம் தான் ஆண்டுக்கொண்டிருக்கும் நாட்டில் இறைவன் எழுந்தருள வேண்டும் என்பது தான். ஆதலாலேயே கைலாய மலையை பெயர்க்க முற்படுகிறான். இதனை செருக்காக எண்ணி இறைவன் தனது கட்டை விரலால் இராவணனது தலையை அழுத்துகிறார். இதனால் அவனது சில தலைகள் நசுங்கி சிதறுகின்றன. அவ்வலியை தாங்கமாட்டாமல் வீணை இசைத்து சாம கீதம் பாடி இறைவனை சாந்தப்படுத்துகிறான் இராவணன் எனும் பொருளில் திருஞானசம்பந்தர் பெரும்பாலான தனது பதிகங்களில் பதிவு செய்கிறார்.

ஆனால் திருநாவுக்கரசர் இதே புராணத்தினை வேறு விதத்தில் எடுத்துச் சொல்கிறார். இராவணன் ஒரு சிவபக்தன். தனது பக்தியை மெச்சும் பொருட்டு கைலாய மலையினை பெயர்த்து இலங்கைக்கு எடுத்துச் செல்ல முற்படுகிறான். இராவணன் வலுக்கொண்டு மலையினை பெயர்க்கும் போது அதன் அதிர்வில் உமையம்மை அஞ்சி நடுங்கி தனது கணவனை ஆரத்தழுவுகிறாள். தனது மனையாள் நடுங்குவதை எண்ணி இறைவன் தனது பெருவிரலால் ‘மெல்ல மெல்ல’ என்று கூறுவதைப் போன்று இலங்கை வேந்தனின் தலையை அழுத்துகிறார். இதனால் இராவணனின் சில தலைகள் சிதறுண்டு போயின. அதன் வலியை தாங்கமாட்டாமல் வீணை இசைத்து சாம கீதம் பாடினான் இராவணன் என்ற பொருளில் பாடுகிறார்.
பார்க்க: தேவாரம் 4.47.10 , 4.30.10 etc..

மேற்கண்ட தேவார பாடல்கள் சுட்டும் நிகழ்வு பவபூதி எழுதிய உத்தர இராமாயணத்தில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. இந்த உத்தர இராமாயணமே இராமனின் மகன்களான இலவன், குசன் பற்றிய குறிப்புகளை தருகிறது. இதுவே தென்னிந்திய அளவில் இடைக்கால சோழராட்சி வரையில் வெகுமக்கள் அறிந்த இராமாயண காவியமாக தெரிகிறது. திருமாலை பின்னிருத்தி சிவனை முன்னிருத்துவதற்காகவே உத்தர இராமாயணம் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது என ஊகிக்க முடிகிறது. பின்னர் வால்மீகியை தழுவி கம்பராமாயணம் படைக்கப்பட்ட பிறகே விஜயநகர/நாயக்க மன்னர்களின் காலத்தில் வால்மீகி இராமாயணக் காவியம் தென்னிந்திய அளவில் புகழ்பெறுகிறது. பிற்கால விஜயநகரத்தினர் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்றியதால் இராமாயண காவியம் திருமாலை முன்னிருத்தி திருக்கோவில்களில் சிற்பங்களாகவும் கூத்து வடிவில் நாடகங்களாகவும் பரவியதை கல்வெட்டுகளினூடாகவும் நாயக்கர் கால பாணியில் எழுப்பப்பெற்ற நூற்றுக்கால் ஆயிரங்கால் மண்டபங்களின் புடைப்புச் சிற்பங்களினூடாகவும் பார்க்க முடிகிறது.

படம்: திருவல்லம் வில்வநாதீஸ்வரர் கோவில்.
பி.கு: இராவணன் கைலை மலையை பெயர்க்க உமை அஞ்சி தன் பதியை ஆரத்தழுவும் இச்சிற்பம் முற்கால சோழர் கலைப்பாணியை சேர்ந்தது.

வடமாநில தொழிலாளர்கள்- வலியும், வேதனையும்- சுமதி விஜயகுமார்.

ஒரு சில வருடங்களுக்கு முன்னர், வெளிநாட்டில் இருந்து குடும்பத்துடன் வந்த ஒரு குடும்பம் தங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்றார்கள். சாமி கும்பிட்டு விட்டு திரும்பும் வழியில், சிறுவர்கள் இருக்க, அவர்களிடம் இருந்த வெளிநாட்டு சாக்லேட்களை அந்த சிறுவர்களுக்கு ஆசையாக கொடுத்திருக்கிறார் அந்த குடும்பத்தின் வயதான தாய். அந்த பாசத்திற்கு அந்த ஊர் மக்கள் அவர்களுக்கு ஒரு பரிசை தந்தார்கள். அது மரணம்.

குழந்தைகளை கடத்தும் கும்பல் உலா வருகிறது என்ற வதந்தி வேகமாக பரவ, அதன் பாதிப்பாய் பல உயிர்கள் பறிக்கப்பட்டது. அதில் ஒரு உயிர் தான் அந்த அம்மா. அது சில மாதங்களுக்கு தான். பிறகு வதந்தி நின்று போனது. கூடவே மரணங்களும். ஒரு செய்தி வந்தால் அது உண்மையா பொய்யா என்று ஆராய எல்லாம் நமக்கு நேரம் இல்லை. உடனே அதை மற்றவர்களுக்கு forward செய்து விடவேண்டும். இல்லை என்றால் மண்டை வெடித்துவிடும்.

இப்படிப்பட்ட வதந்திகள் சமீபத்திய தொடர்ச்சி தான் வடமாநில தொழிலாளிகள் மேல் நடத்தும் தாக்குதல்கள். ஒருவேளை சோற்றிற்கு வழியில்லாமல், மனைவி ,மக்கள், ஊரை விட்டு தமிழ்நாட்டிற்கு அவர்கள் வருவது நம் சோற்றில் மண்ணள்ளி போட அல்ல. அவர்களின் தேவை எல்லாம் உயிர் வாழ தனக்கும் தன் குடும்பத்திற்கும் கொஞ்ச சோறு தான். வடமாநில தொழிலாளிகள் மூலம் தமிழர்களின் வேலை பறிபோகிறது என்ற தவறான கருத்து பல வருடங்களாகவே பரவி வந்தாலும், இப்போது தான் உச்சகட்டத்தை நெருங்கி இருக்கிறது.

ஆனால் என்ன, உண்மையில் தமிழர்களின் உரிமையை பறித்துக் கொண்டிருக்கிற எந்த ஒரு பணக்கார வடமாநிலத்தவரும் இதுவரை தாக்கப்பட்டதில்லை. கூலிக்கு வேலைக்கு போகின்றவர்களை தாக்குவது தான் மிக எளிது. கேட்க ஆள் இல்லை. அவர்கள் இறந்தது கூட தெரியாமல் அவர்கள் அனுப்பும் சொற்ப பணத்திற்கு அவன் குடும்பம் காத்திருக்கும்.

இந்திய சட்டம் நிர்ணயித்திருக்கும் அதிகபட்ச பணி நேரத்திற்கு விட அதிகமாகவும், குறைந்த பட்ச கூலியை விட குறைவாக வாங்கும் அவர்கள் எந்த விதத்தில் தமிழர்கள் உரிமையை பறித்துக்கொண்டார்கள் என்பதை இந்த தாக்குதலை ஆதரிப்பவர்கள் தெரிவிக்க வேண்டும். இது பரவி இப்போது ஒரு கல்லூரியிலே பணி புரியும் வடமாநிலத்தவரை மாணவர்கள் தாக்கியுள்ளார்கள். JNU வில் தமிழ் மாணவர்களை தாக்கியதை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதோ, அதே அளவுகோளில் தான் இந்த தாக்குதலையும் எதிர்க்க வேண்டும்.

ஆப்ரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த அனைத்து வந்தேறிகளும் மற்றவர்களை பார்த்து வந்தேறிகள் என்று சொல்வது எவ்வளவு முரண். முதலில் தமிழர்களின் உண்மையான எதிரி யார் என்பதை தமிழர்கள் தங்கள் சுய சிந்தனை மூலம் அறிந்து கொள்ள வேண்டும். வாட்ஸாப் வந்தந்திகள் மூலம் பாடம் படிக்க கூடாது. வடமாநில கொள்ளையர்கள் இருக்கிறார்கள் தான் மறுப்பதற்கில்லை. தமிழர்களில் கொள்ளை அடிப்பவர்கள் இல்லவே இல்லையா?

உலகம் முழுவதிலும் இரண்டே இரண்டு வர்கம் தான். பணக்கார வர்கம் – ஏழை வர்கம், அடக்கும் வர்கம் – அடக்கப்படும் வர்கம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பாடி பெருமை பட்டு கொண்டால் மட்டும் போதாது. முதலில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியையும், பிரிட்டனின் பிரதமரையும் பதவி விலக சொல்லி , இந்தியாவிற்கு அழைத்து வந்த பிறகு, வடமாநில தொழிலாளிகளை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றலாம்.

தமிழன் பிற நாட்டை ஆண்டால் பெருமை, அடுத்த மாநிலத்தவர்கள் பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்தால் வன்முறை.

சுமதி விஜயகுமார்

நடிகவேள் எம்.ஆர். ராதா

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” இது ஒரு மகா கலைஞனின் எடைக்கல் வார்த்தை.

‘பாகப்பிரிவினை’ படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், “சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார். ஆனால் ராதாவின் ‘சிங்கப்பூர் சிங்காரம்’ பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது” என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார். ராதாபோல் செய்ய தெலுங்கில் ஆள் இல்லை என்று. அந்த ஏற்றமும் இறக்கமும் திடீரெனக் கீழே இறங்கிக் கெக்கலி கொட்டும் மாடுலேஷனும், அந்தக் குரலின் மாயவித்தைகளை முகத்திலும் காட்டத் தெரிந்த பாவனைகளும் யாரிடமும் கற்காத ராதாவின் சொந்தக் கண்டுபிடிப்புகள். ஒரே காட்சியில் மிகை நடிப்பு, யதார்த்த நடிப்பு, கீழ் நடிப்பு என்று எல்லா நடிப்பு வகைகளையும் காட்டிக்கொண்டே எல்லாவற்றையும் கலந்த ஒரு புதுவகை நடிப்பையும் மக்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்தியதால்தான் அவரை ‘நடிகவேள்’ என்றது தமிழ்நாடு. கவிதையை ஜனநாயகப்படுத்திய புதுக்கவிதை போல, ஓவியத்தில் பார்க்கும்போதெல்லாம் புதிய அனுபவம் தந்த நவீன ஓவியம்போல, நடிப்பில் பல மரபுகளை உடைத்த ‘நவீன நடிப்பு’ அவருடையது. அதனால்தான் எத்தனைமுறை பார்த்தாலும் ராதா நடிப்பு சலிப்பதேயில்லை. சினிமாவில் எல்லா நடிகர்களும் சுத்தத் தமிழ் பேசிய காலத்திலேயே ராதா மட்டும்தான் கொச்சைத் தமிழ் பேசுவார். அந்தக் கொச்சைத் தமிழ் மக்களைச் சுத்தமாக்கியதுதான் வரலாறு.

அவருக்கும் திருச்சிக்குமான உறவு ஆழமானது. அவர் வாழ்ந்ததும் மறைந்ததும் திருச்சியில்தான். “காந்தா” என்ற கரகரத்த குரலை முதன்முதலில் கேட்ட ஊர் திருச்சி. ராதாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் 1949-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் திருச்சியில்தான் அரங்கேறியது. 3000 முறை மேடை கண்ட அந்த நாடகத்தைத் திருவாரூர் கே.தங்கராசு எழுதினார். சாகித்ய அகாடமியின் செயலாளராக நேருவால் அமர்த்தப்பட்ட பிரபாகர் மாச்வே ஒரு மராத்தியர். அவர் ரத்தக்கண்ணீர் பார்த்துவிட்டு, சிறந்த உலக மேடை நாடகங்களில் ரத்தக்கண்ணீர் ஒன்று என்றும் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றில் உள்ள முக்கியப் பெயர்களில் ஒன்று என்றும் சொன்னார். ரத்தக்கண்ணீர் நாடகத்தை காங்கிரஸ்காரரான பி.ஏ.பெருமாள் முதலியார் சினிமாவாக எடுத்தார். ராதா முதலியாரிடம் சில நிபந்தனைகள் விதித்தார். சினிமாவுக்காக நாடகம் நடத்துவதை விட முடியாது. நாடகம் முடிந்துதான் ஷூட்டிங் வைக்கணும். நாடகத்தின் உச்சக் காட்சியான தன் மனைவியை நண்பன் பாலுவுக்கு மணமுடிப்பதை மாற்றக்கூடாது. அடுத்ததுதான் அவரின் தனித்துவம், கே.பி.சுந்தராம்பாள்தான் அந்தக் காலத்தில் நந்தனாராக நடிக்க ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர். அதைவிட அதிகமாக ரூ.25,000 தரவேண்டும் என்றார் ராதா. பெருமாள் முதலியார் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார்.

1954 தீபாவளிக்கு வந்த ‘ரத்தக்கண்ணீர்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட். மூட நம்பிக்கைகளை நகையாடிய படமது. சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் மக்கள் ஏற்பார்கள் என்பதன் சிறந்த உதாரணம் ரத்தக்கண்ணீர். இன்று தொலைக்காட்சிகளில் போட்டால்கூட 68 ஆண்டுகள் கழிந்தும் மக்கள் ரசித்து, ராதாவின் வசனங்களைப் பேசுகிறார்கள். அதுபோலவே ராதாவின் பெயரோடு ஒட்டி உறவாடும் ‘நடிகவேள்’ பட்டம் தரப்பட்டதும் திருச்சியில்தான். ‘போர்வாள்’ நாடகம் திருச்சி தேவர் ஹாலில் நடந்தபோது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி ‘நடிகவேள்’ என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கினார்.

எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் பெரிய எதிர்ப்பைச் சந்தித்த நாடகம் ‘ராமாயணம்.’ அதில் ராதா ராமனாக நடித்தார். வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகமது. மேடையின் இரண்டு பக்கமும் தன் நாடக எழுத்துக்கு ஆதாரமான சமஸ்கிருத மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அடுக்கி வைத்தார். அரசு தடை விதித்தது. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று 15-9-1954-ல் பெரியார் தலைமையில் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் முதல் முறையாக மேடையேற்றினார். திருச்சி தேவர் ஹாலில் ராமாயணம் நடந்தபோது “உள்ளே வராதே” என்று அதிரடியாக போஸ்டரும் நோட்டீசும் வெளியிட்டார். “என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராய் இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம்” என்றார் துணிச்சலோடு. இவருக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் நாடகத் தடைச் சட்டம்.

ராமாயணம் நாடக போஸ்டர்ராமாயணம் நாடக போஸ்டர்
‘இழந்த காதல்’ நாடகம்தான் ராதாவை அடையாளப்படுத்திய நாடகம். “எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைக் காணத்தவறாதீர்கள்” என்று விளம்பரம் செய்யப்பட்ட நாடகமிது. இந்த நாடகம் சேலத்தில் நடந்தபோதுதான் ராதாவின் ஆற்றலைக் கண்டு வியந்த அண்ணா, பெரியாரையும் அழைத்துவந்து நாடகம் பார்க்கவைத்தார். மேலை நாட்டு நடிகர் பால்முனிக்கு ராதாவை அண்ணா ஒப்பிட்டார். ராதாவின் ஒரு நாடகம் தாங்கள் நடத்தும் 100 மாநாடுகளுக்குச் சமம் என்றார் அண்ணா. இந்த நட்பால்தான் ராதாவின் ‘திராவிட மறுமலர்ச்சி நாடக சபா’ உருவானது. ஆனாலும் அண்ணா பெரியாரை அரசியலில் பிரிந்தபோது ‘அண்ணாவின் அவசரம்’ என்று புத்தகம் எழுதி அண்ணாவிடமே கொடுத்து, இதைப் படியுங்கள் என்றவர் ராதா.

‘விமலா அல்லது விதவையின் கண்ணீர்’ என்ற புது நாடகத்தில் பெண்கள் படும் வேதனைகளை ராதா வலிமையாகப் பேசினார். சமூக சீர்திருத்த நாடகம் என்று நாகப்பட்டினத்தில் விளம்பரம் செய்திருந்தார். ஊர் பெரியவர்கள் சிலர் நாடகம் நடத்தத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றனர். கணேசய்யர் நீதிபதியாக இருந்தார். இவர் சாஸ்திர அறிவு மிக்கவர். பார்க்காமல் தடை விதிக்க மறுத்த கணேசய்யர் ஒருநாள் நாடகம் பார்க்க வந்தார். ராதா தன் சக நடிகர்களிடம் எதையும் மாற்றாமல் அப்படியே நடியுங்கள், வருவது வரட்டும் என்றார். ஒரு காட்சிகூட விடாமல் எல்லாக் காட்சிகளையும் ரசித்த கணேசய்யர் மேடையில் சொன்னார், ”விதவைகள் படும் துன்பம் சாதாரணமானதல்ல. அவர்களுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் இந்த நாடகம் நாட்டுக்குத் தேவையான ஒன்று. விதவைகள் பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது என்பதெல்லாம் அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு சமமல்லவா. நாடகம் எல்லா ஊரிலும் நடக்கட்டும். ராதா நீண்டநாள் வாழ்ந்து தொண்டு செய்யட்டும்” என்றார்.

‘தூக்கு மேடை’ நாடகம் கலைஞர் கருணாநிதி எழுதியது. ‘கலைஞர்’ என்ற அடைமொழிதான் அவரது பெயரான கருணாநிதி என்பதைவிட அதிகமான தமிழர்களால் உச்சரிக்கப்படுகிறது. இந்தக் கலைஞர் பட்டம் அவரை வந்தடைந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. புது நாடகம் ஒன்று போட எம்.ஆர்.ராதா விரும்பினார். திருவாரூரிலிருந்து வந்த இளைஞரான கருணாநிதி தஞ்சையிலேயே தங்கி ‘தூக்கு மேடை’ நாடகத்தை எழுதிக்கொடுத்தார். மகிழ்ந்துபோன ராதா, நாடகம் எழுதியவரை ‘அறிஞர் கருணாநிதி’ என்று போஸ்டர்களில் விளம்பரப்படுத்தினார். அண்ணாவுக்கான அடைமொழியைத் தனக்குப் பயன்படுத்தியதை கருணாநிதி ஏற்கவில்லை. “ஏன் உங்க கட்சியில ஒரு அறிஞர்தானா” என்று ஜாலியாகச் சிரித்த ராதா, நாடகத்தின் முதல் நாள் கருணாநிதியை ‘கலைஞர் கருணாநிதி’ என்று அழைத்தார். அன்றுமுதலே தான் கலைஞரானதாகவும் அதுவே தன்னோடு நிலைத்ததாகவும் கலைஞர் 13-9-1989 முரசொலியில் எழுதினார்.

நாடகத்தில் இல்லாத வசனங்களைப் பேசி அதிர்ச்சியூட்டுவது ராதாவின் வாடிக்கை. அதுவே பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது. ‘தூக்கு மேடை’ நாடகத்தில் பாண்டியனாக நடித்த கலைஞரிடம் “உங்க அண்ணாவை தளபதி தளபதின்னு சொல்றீங்களே, அவரு எந்தப் போருக்குத் தளபதி” என்று திடீரெனக் கேட்டார் ராதா. கலைஞர் சுதாரித்துக்கொண்டு, “வீணை வாசிக்கப்படும்போது மட்டும் வீணையல்ல. உறையில் இருந்தாலும் வீணைதான். அதுபோலத்தான் போருக்கும் அவர்தான் தளபதி. அமைதிக்காலத்திலும் அவர்தான் தளபதி” என்று சொன்னதாக பின்னாள்களில் கலைஞர் எழுதினார்.

எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து. அந்த நாடகத்துக்குத் தலைமை பெரியார். பாதி நாடகம் முடிந்து இடைவேளை நேரத்தில் பெரியார் பேசுகிறார். பார்வையாளரில் ஒருவர் எழுந்து, “இவரு பேச்சைக் கேட்க நாங்க காசுகொடுக்கலை. நாடகத்தைப்போடு” எனக் கத்துகிறார். மேக்அப் ரூமிலிருந்த ராதாவுக்குச் செய்தி போகிறது. பாதி மேக்கப்போடு வந்த ராதா, கத்தியவரைப் பார்த்து, “நாடகம் முடிஞ்சிடுச்சு, நீங்கள் போகலாம். இனி இவர்தான் பேசுவார்” என்றாரே பார்க்கலாம், பெரியாரே அசந்துவிட்டார். இந்தமாதிரி பதிலை அவரே எதிர்பார்க்கவில்லை.

அவரின் கரகரத்த குரலும் அதிரடியான கருத்துகளும் அவருக்கு முரடர் போன்ற தோற்றத்தைக் கொடுத்ததென்னவோ உண்மை. ஆனால் அன்பும் மனிதமும் நிறைந்த மனிதராகவே அவர் வாழ்ந்தார். என்.எஸ்.கே, பாகவதர், ஏ.பி.நாகராஜன், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், டி.ஆர். மகாலிங்கம், வசனகர்த்தா இளங்கோவன், பட்டுக்கோட்டை அழகிரி என்று பலருக்கு அவர்களின் கடைசிக்காலத்தில், அவர்களால் பயன்பட்டவர்களெல்லாம் ஒதுங்கிக்கொள்ள, சத்தமில்லாமல் உதவி செய்தவர் ராதா மட்டும்தான். நாதஸ்வர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை மறைந்தபோது அவரின் இறுதிச் சடங்கை முன்னின்று நடத்தியதோடு, அவரின் சமாதியில் 48 அடி உயரத்தில் நாதஸ்வரம் செய்துவைத்தார். அவரின் மகனுக்கு ஒரு மெக்கானிக் பட்டறையும் வைத்துக்கொடுத்தார்.

யதார்த்தம் பொன்னுசாமி பாராட்டு விழாயதார்த்தம் பொன்னுசாமி பாராட்டு விழா
நாடக விவசாயி என்று புகழப்பட்டவர் திருச்சி உறையூரைச் சேர்ந்த டி.பி.பொன்னுசாமி பிள்ளை. ‘யதார்த்தம் பொன்னுசாமி’ என்றே இவரை நாடக உலகம் அழைத்தது. சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, டி.எஸ்.பாலையா, காகா ராதாகிருஷ்ணன் போன்ற மகா நடிகர்களை உருவாக்கியவர் இவர். நாடக உலகம் இவரை மறந்துவிட்ட சூழலில் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் 40 ஆண்டுக்கால நாடகப் பணியைப் பாராட்டி 4-11-1956-ல் விழா எடுத்து நாடகம் நடத்தி நிதியளித்து நன்றி செலுத்தியவர் எம்.ஆர்.ராதாதான்.

குன்றக்குடி பெரிய அடிகளார் எம்.ஆர்.ராதாவுக்கு ‘கலைத்தென்றல்’ என்ற பட்டத்தைக் கொடுத்தபோது மலைக்கோட்டை மணி அடிக்க ராதாவின் மேல் மலர்மழை பொழிய ஒரே அமர்க்களம். அப்போது அடிகளார், “ராதா மதத்தையும் சமயத்தையும் வெளுத்தெடுப்பதாகச் சொல்கிறார்கள், தூய்மையாக்கவே அவர் வெளுக்கிறார். அதனால்தான் அவரை நான் தென்றல் என்கிறேன்” என்றார்.

“நான் சினிமா உலகத்துக்கு மாறுபட்டவன்-எதிர்ப்பாளன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட நானே ராதா பெயரில் ஒரு மன்றம் நிறுவுகிறேன்” என்று சொல்லி, பெரியார் ‘ராதா மன்ற’த்தை 17-9-1963-ல் திறந்து வைத்தார். அப்போது சொன்னார், “எல்லாக் கலைஞர்களும் ரசிகர்களைத் திருப்திப்படுத்த அவர்களின் பின்னால் செல்வார்கள். ஆனால் ராதாவோ ரசிகர்களின் திருப்தியைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களைத் தன் பின்னால் வரவைப்பவர். அதனால்தான் அவருக்கு மன்றம் வைத்தேன்” என்ற பெரியார், ’ராதா வாழ்க’ என்று பேசி முடித்தார்.

இம்பாலா காரை அந்தஸ்தின் அடையாளமாகப் பலர் பார்த்தனர். ஆனால் ராதா தனது இம்பாலா காரில் கேளம்பாக்கத்தில் இருந்த தனது மாட்டுப்பண்ணைக்கு வைக்கோல் ஏற்றி அனுப்பினார். “என்ன இது, வைக்கோல் ஏத்த இம்பாலாவா” என்ற அந்தப் பெரிய நடிகரிடம் ராதா சொன்னார், “இதுவும் ஒரு சாயம் பூசிய தகரம்தான். நம் வேலையை சற்று வேகமாகச் செய்துகொள்ளப் பயன்படும் ஒரு சாதனம் அவ்வளவுதான். இதற்கு மேல் எந்த மதிப்பும் அதுக்கு இல்லை. பசிக்கும் என் மாட்டுக்கு உடனே அனுப்பத்தான் வைக்கோலை இம்பாலாவில் ஏத்தினேன்” என்றாரே பார்க்கலாம். அந்தப் பெரிய நடிகருக்கு முகத்தில் வழிந்த அசடை தன் நடிப்பால் துடைத்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிம்பம் உடைத்தல்!

1975ஆம் ஆண்டு வந்த அவசரநிலை சட்டத்தால் (மிசா) ராதா கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தால் கைதான இந்தியாவின் ஒரே நடிகர் அநேகமாக ராதா ஒருவர்தான். ஒரு நாள் ராதா விடுதலையானார். போலீஸ் அதிகாரி “சார் நீங்கள் உடனே கிளம்பலாம்” என்றார். ’பழகின இடம். டக்குனு போகமுடியுமா? இருங்க குளிச்சிட்டு வாரேன்’ என்று நிதானமாகவே கிளம்பினாராம் ராதா. இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி பாவிக்கும் துறவு மனநிலையை ராதா பெற்றிருந்தார்.
சினிமா நாடகம் எதிலும் அவர் பேசிய பல வசனங்கள் உதட்டின் உற்பத்தியல்ல; வாழ்வின் செய்தி. ஒரு படத்தில் எஸ்.வி.சுப்பையாவைப் பார்த்துக் கேட்பார், “அது எப்படி ஜேம்ஸ், நீ நல்லவனா இருந்தும் பணக்காரனா இருக்கே.” இதை வெறும் வசனந்தானே என்று தள்ள முடியுமா? எழுத்தாளர் விந்தனோடு அவர் சிறையில் நிகழ்த்திய உரையாடல் முக்கியமானது. அதில் சொன்னார், “என்னுடைய பெருமை மட்டும் உலகத்துக்குத் தெரிஞ்சாப் போதாது. பலகீனமும் தெரியணும். இல்லைன்னா மக்களை ஏமாற்றுவதா ஆகிவிடும்.” இது சாதாரண நடிகனின் பேச்சா, ஒரு ஞானியின் ஒளிக்கீற்று அல்லவா?! 

கவிஞர் நந்தலாலா

முதலாளிகளின் சேவகன் – மோடி- க.இரா. தமிழரசன்

நாட்டை நாசமாக்கும் கூட்டாளிகள் – 8

2014 இல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு தமது தேர்தல் பரப்புரையில் ” நான் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் பதினைந்து இலட்சங்களைச் செலுத்துவேன், கருப்பு பணத்தை மீட்பேன் என்றார். ஆனால், நடப்பது என்ன ?

பணமதிப்பு இழப்பை அறிவித்து ஏழைகளின் வங்கிச் சேமிப்பைக் கூட உருவியது தான் மிச்சம். ஏழைகளின் வங்கிக் கணக்கில் ஒத்த ரூபாய் இல்லை. ஆனால்,முதலாளிகளின் வங்கிக் கணக்கில் கோடிகோடியாக கொட்டிக் கொண்டு இருக்கிறார். மோடியின் இந்த ஆட்சி காலத்தில் பொதுத்துறை வங்கிகளிலிருந்து முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி கடன் தாரை வார்க்கப்படுகிறது.

“கடன்” மூலமாக மட்டுமே அதானி மட்டுமல்லாது எல்லா பெரு முதலாளிகளும் மோடி ஆட்சிகாலத்தில் தங்கள் குழுமத்தை உருவாக்கி தங்கள் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தாங்கள் நடத்தும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி வங்கிகளிடம் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்த மறுக்கின்றன.

மோடி அரசும் முதலாளிகள் வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்பப் பெறுவதை விட அவற்றை தள்ளுபடி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றது. அது மட்டுமல்லாது அவர்கள் இந்தியாவை விட்டு தப்பி ஓடுவதற்கு உதவியும் செய்கிறது. காங்கிரஸ் அரசும் இப்படி செய்ததுதான். ஆனால் மோடி அரசு காங்கிரசை விட பல மடங்கு பெரு முதலாளிகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2004 முதல் 2014 வரையான பத்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த வராக் கடன் தொகை ரூ.63,503 கோடி. நரேந்திர மோடி பிரதமரானதும் முதல் நிதியாண்டில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ. 60,197 கோடி. அதாவது 10 ஆண்டுகளில் மன்மோகன் சிங் அரசு செய்த தள்ளுபடியை கிட்டத்தட்ட ஓராண்டிலேயே செய்தது மோடி அரசு.

2014ல் மோடி பிரதமரான பின்னரான கடந்த 8 நிதியாண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்த கடன் தொகை 12 லட்சத்து 61 ஆயிரத்து 5 கோடி ரூபாய். இது, மன்மோகன் சிங்கின் பத்து ஆண்டுகள் தள்ளுபடியை விட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம். அதிகபட்சமாக கொரோனா காலகட்டத்தில் 2019 – 20 நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்து 924 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 2020 – 21 நிதியாண்டில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 968 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2020-21ஆம் நிதியாண்டில் 5 வங்கிகள் சேர்ந்து ரூ.89 ஆயிரத்து 686 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளன. இதில் எஸ்பிஐ வங்கி மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.34 ஆயிரத்து 402 கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

யூனியன் வங்கி ரூ.16 ஆயிரத்து 983 கோடி கடனையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.15 ஆயிரத்து 877 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.14 ஆயிரத்து 782 கோடியும் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன. இந்த வங்கிகள் தான் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான விமான சேவை நிறுவனத்துக்கு கடனை அள்ளி வழங்கின.

1,600 கோடி ரூபாய் கடனை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விஜய்மல்லையாவுக்கு அள்ளிக் கொடுத்தது. 800 கோடி ரூபாயை பஞ்சாப் நேஷனல் வங்கியும், 800 கோடி ரூபாயை ஐடிபிஐ வங்கியும், 650 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் இந்தியாவும், 550 கோடி ரூபாயை பேங்க் ஆஃப் பரோடாவும் வழங்கின. அவரோ கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத ஏழையாகிவிட்டதால் மோடி ஆசியுடன் லண்டனுக்குத் தப்பியோடினார்.

2008-2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் வாராக்கடன் தள்ளுபடி 32 ஆயிரம் கோடி, 2014-2022 வரையிலான பாஜக ஆட்சியியில் வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடியாகும்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு வங்கி மோசடிகளும் அதிகமாகின.

2014-க்குப் பிறகு, அரசு நடத்தும் வங்கிகளில் மோசடிகள் நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. 2017-18 உடன் ஒப்பிடும்போது, 2018-19ல் மோசடிகள் 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டுடன் முடிவடைந்த நிதியாண்டில், 10,171 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளில் நடைபெற்ற மோசடிகள், அடுத்த ஆண்டில் 19,455 கோடியாக அதிகரித்தது.

2015-16ல் சற்று குறைந்து 18,699 கோடி ரூபாயாக இருந்த இது, மீண்டும் 2016-17ல் வேகமாக அதிகரித்து 23,944 கோடி ரூபாயை எட்டியது. அதன் பிறகு, 2017-18 ஆம் ஆண்டில் 41,168 கோடியாகவும், 2018-19ல் 71,543 கோடியாகவும் உயர்ந்தது.

2018-19இல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் 22,000 க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் 25,417 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதாக தெரியவந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (10,822 கோடி ரூபாய்), பாங்க் ஆப் பரோடா (8,273 கோடி ரூபாய்) ஆகியவை மோசடியில் அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தன.

வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது தான். இந்தியாவின் மாபெரும் மோசடி.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கச் சென்றபோது, அவருடன் சென்ற இந்திய தொழில் அதிபர்களின் குழுவில் நிரவ் மோடியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்.

வங்கியின் சில அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு எல்லா விதிமுறைகளையும் மீறி மக்களின் சேமிப்புப் பணத்தை நீரவ் மோடி சூறையாடிவிட்டு பணத்தை திருப்பிச் செலுத்தாமல் அவரும் மோடியின் ஆசியுடன் பிரிட்டனுக்கு தப்பி ஓடினார்.

வீடியோ கான் நிறுவனர் வேணுகோபால் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிலிருந்து ரூ.3,250 கோடி கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார்.

வங்கிகளில் கடன் மோசடி செய்தவர்களின் எண்ணிக்கை 2017 ஜூன் 30ம் தேதிப்படி 9,661 ஆக இருந்தது. இது கடந்த ஜூன் 30ம் தேதியில் 14,886 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்ற கடன் மோசடி செய்தவர்களுக்கு எதிராக 515 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் 312 பேர் தாங்கள் வாங்கியக் கடன்களைத் திரும்பச் செலுத்தாத வாராக்கடன் மட்டுமே ரூ.1.41 லட்சம் கோடியாக உள்ளது. இதில் அதிகமாக கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் மோசடி செய்த முதல் 50 தொழிலதிபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தத தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிட வைப்பதற்கே கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

இந்த 50 தொழிலதிபர்கள் மட்டுமே ரூ.92,570 கோடி மோசடி செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, இந்த 50 மோசடி தொழிலதிபர்களில் முதலிடத்தில் இருப்பது மெகுல் சோக்சி.

மெகுல் சோக்சியின் (நீரவ் மோடியின் மாமனார்) கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் மட்டுமே ரூ.7,848 கோடி மோசடி செய்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஹெம் சிங் பரானாவின் எரா இன்ப்ரா இன்ஜினியரிங் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ரூ.5,879 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துள்ளது.

சந்தீப் மற்றும் சஞ்சய் ஜூன்ஜூன்வாலா சகோதரர்களின் ரெய் அக்ரோ நிறுவனம் ரூ.4,803 கோடியும், கான்காஸ்ட் ஸ்டீல் பவர் நிறுவனம் ரூ.4,596 கோடியும், ரிஷி அகர்வாலின் ஏபிஜி ஷிப் யார்டு (குஜராத்) ரூ.3,708 கோடியும், ஃப்ராஸ்ட் இன்டர்நேஷனல் ரூ.3,311 கோடியும்,

ஜதின் மேத்தாவின் வின்சம் டயமண்ட்ஸ் ரூ.2,931 கோடியும், விக்ரம் கோத்தாரியின் ரோட்டோமேக் குளோபல் ரூ.2,893 கோடியும், கோஸ்டல் பிராஜக்ட்ஸ் ரூ.2,311 கோடியும், ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2,147 கோடியும் வங்கிகளில் கடன் மோசடி செய்துள்ளனர்.

மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கும்மேல் வங்கி மோசடி நடந்துள்ளது. 2015-2019 வரை மட்டும் வங்கிக்கடன் மோசடி செய்த 38 பெருமுதலாளிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

ஆனால் விவசாயிகளோ தாங்கள் வாங்கிய விவசாயக் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ADSI அறிக்கையின்படி, 2018 இல் 5,763 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர், அதே சமயம் 2019 இல் 5,957 பேர் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் 2020 இல் 5,579 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக அது கூறுகிறது.

2020 ஆம் ஆண்டில், விவசாயம் சார்ந்த துறையில் 4,006 தற்கொலைகள் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகா (2,016), ஆந்திரப் பிரதேசம் (889), மத்தியப் பிரதேசம் (735) மற்றும் சத்தீஸ்கர் (537) என எல்லா மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. விவசாயத் துறையில் தினமும் 30 பேர் தற்கொலை செய்து கொள்வதாக இன்னொரு புள்ளிவிவரம் கூறுகிறது

2015 ஆம் ஆண்டில் 3000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதில் 2474 பேர் உள்ளூர் வங்கிகளில் கடனை செலுத்தாததால் தற்கொலை செய்து கொண்டதாக என்சிஆர்பி ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் உடைமைகள் வங்கிகளால் பறிமுதல் செய்யப்படுவதும், கடனை செலுத்த முடியாத விவசாயிகள் நிதி நிறுவன குண்டர்களால் தாக்கப்படுவதும், ஆபாச வசைச் சொற்கள் மூலம் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

நரேந்திர மோடி ஆட்சியில் கடன் வாங்கும் முதலாளிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இதுதான் நரேந்திர மோடியின் ஆட்சியின் சாதனை. முதலாளிகளுக்கு சேவகம் செய்பவராகவும் உழைக்கும் மக்களுக்கு பாதகம் செய்பவராகவும் இருக்கிறார்.

(தொடரும்)