Friday, April 26, 2024 05:04 pm

Subscribe to our YouTube Channel

277,000SubscribersSubscribe
Home Blog Page 3

கௌசிகா ஆற்றங்கரை சமுதாய வரலாற்று ஆவணங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி சுமார் 50 கி.மீ தூரமே பயணித்து நொய்யலோடு கலக்கிறது கௌசிகா ஆறு எனப்படும் வண்ணாற்றங்கரை ஆறு. இதன் கரையில் மூன்று வரலாற்றுக் கால கோயில்களும் உண்டு. அக்கோயில்கள் கொங்கு சோழர் எனும் கோநாட்டு வம்சத்தவரால் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டன. இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி சமூகங்கள் பொது நீரோட்டத்தில் இணைந்த பொழுது உண்டான சமூகச் சிக்கல்கள், சமூகக் குழுக்களின் எழுச்சி, உரிமைகள் குறித்து பேசும் கல்வெட்டுகளைத் தாங்கியிருக்கும் வரலாற்றுக் கருவூலங்களாகக் கௌசிகா ஆற்றங்கரைக் கோயில்கள் விளங்குகின்றன. இதற்கெல்லாம் மேலாக, இந்த ஆறானது தொல்லியல் ரீதியாகவும் கவனத்தை ஈர்க்கிறது. ராபர்ட் புரூஸ் புட் எனும் காலனிய கால நில அளவையாளர்- தொல்லியலாளர் தமிழகம் முழுவதும் பயணித்தக் காலத்தில் ஓரிடம் குறித்து விதந்து பதிவு செய்திருக்கிறார். அவ்விடம் இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலையில் சிற்றோடையாக உருப்பெற்று பல கிளையோடைகளின் கூடுதலால் பரந்த பரப்பிலான காட்டாறாக வடிவம் கொண்டு இன்றையக் கோவில்பாளையம் அருகே ஒரு பெரிய வளைவைச் சந்திக்கிறது. அதன் இருகரைகளிலும் பெரியமேடு இருந்திருக்கிறது. அவ்விடத்திலுள்ள சாம்பல்நிற மண்ணடுக்குகளைத்தான் இராபர்ட் புரூஸ்புட் விதந்து சொன்னது. அவ்விடத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்தக் கல்லாயுதங்கள், பழுப்புநிற மட்பாண்ட வகைகளை அவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். இந்ந ஆற்றின்  பயணத்தில் அவினாசி அருகில் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு படிந்த உயிர்களின் புதைப்படிமங்களும் கண்டறியப்பட்டு, அவை தற்போது கோவை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் இந்த ஆற்றின் தொல்லியல் சிறப்புகள்.

தொல்லியல் வரலாற்று ரீதியாக இருப்பைக் கொண்டிருக்கும் கௌசிகா ஆறானது தற்போது அதன் பழைய வடிவத்தை அடையாளங் காணமுடியாத நிலைக்கு சென்று விட்டது. அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இயங்கி வருபவர் அண்ணன் செல்வராஜ்.‌ கௌசிகா ஆற்றின் பரப்பில் தொல்லியல், கல்வெட்டு தரவுகள் எது கிடைத்தாலும் அவற்றை ஆவணப்படுத்துவதன் வழியே நதியையும் மீட்டெடுக்க முடியும் என்று நம்புபவர். அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு யாக்கை ஆற்றின் இரு கரைகளிலும் கிடைக்கும் தொல்லியல், வரலாற்றுத் தரவுகளை ஆவணப்படுத்தி வருகின்றது. அந்தப் பயணத்தில் நடுகற்கள், கோயில்கள், தொல்லியல் மேடுகள், புதைப் படிமங்கள் என முப்பதிற்கும் மேற்பட்ட தடயங்களை ஆவணப்படுத்தியதும் அடங்கும்.

சில நாட்களுக்கு முன்பு அண்ணன் செல்வராஜ் அழைத்து இங்கு ஒரு செப்பேடு இருக்கிறது என்றார். அது கோவை மாவட்டம் வாகரையாம்பாளையம் அருகிலுள்ள பாப்பம்பட்டி கரிய காளியம்மன் கோயில் நிர்வாகத்தாரிடம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது வாருங்கள் என்றிருந்தார். அக்கோயிலில் முன்னரே விஜய நகர மற்றும் திப்பு சுல்தான் காலத்திய நாணயங்கள் இருந்ததை நமது யாக்கை குழு பதிவு செய்திருக்கிறது. வீரராயபணம், மைசூர் உடையார் 5cash, திப்பு சுல்தான் காலத்திய நாணயங்கள் ஆகியன அவற்றிலடங்கும். வீரராய பணம் பொ.ஆ. 1600-1700 வாக்கில் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தவை. தங்கத்தாலான இந்த பணத்தின் பரவல் தென்னிந்தியா முழுமைக்கும் இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அண்மையில் கீழடி மற்றும் அகரம் அகழாய்விலும் வீரராய பணம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டு நாணயங்களும் பொ.ஆ. 17, 18ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாகும். இந்த நாணயங்கள் அனைத்தும் கோயில் நிர்வாகத்தாரின் கைவசம் உள்ளது. இந்த நாணயங்கள் ஆவணப்படுத்திய நாளில் காரியக் காளியம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள கோவில் காட்டில் ஒரு தூண் கல்வெட்டையும் ஆவணப்படுத்தினோம். அக்கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்து விட்டது. சில எழுத்துக்களை மட்டுமே அடையாளப்படுத்த முடிந்த வகையில் அது பொ.ஆ. 17 ஆம் நூற்றாண்டு எழுத்தமைவுக் கொண்டதாக தெரிகின்றது. “பரிசாவது, கடமை” போன்ற வார்த்தைகளை அடையாளம் காண முடிகின்றது. உரிமை மற்றும் தானம் கொடுத்த தகவல்கள் பதிவாகியிருக்கலாம். எனினும் முழுமையான தரவுகளைப் பெற முடியவில்லை. கரியக்காளியம்மன் கோவில் மூலவராக உள்ள காளி எட்டு கரங்களுடன் கையில் சூலம், அக்னி, கபாலம் ஏந்தியவாறு பழங்குடித் தன்மையுடன் காட்சித் தருகின்றாள். மூலவர் சிற்பம் சுமார் ஐநூறு ஆண்டுகள் மதிக்கத்தக்க சிற்பமைப்பைக் கொண்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் நினைவுக்கல் வகை நடுகல் ஒன்றும் உள்ளது. அது சமூகத் தலைவர்கள் நினைவாக வைக்கப்பட்டதாகும்.

தேவாங்கர் சமூகத்தவர் மற்றும் கொங்கு பட்டக்காரர்கள் நிர்வாகத்தைப் பதிவு செய்யும் செப்பேடு.
தமிழ்நாட்டின் வரலாற்றுக் காலக்கோட்டை தொய்வின்றி நிரப்புவதற்கு பிற்காலத்தில் கிடைக்கும் சமுதாய ஆவணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் கிடைக்கும் பிற்கால சமுதாய ஆவணங்களில் காலக்குறிப்புகள் குறித்த குழப்பங்கள் உள்ளன. அவை விவரிக்கும் சமூகப் புகழ்பாடல் ஆய்வாளர்களிடையே செப்பேடுகளின் நம்பகத்தன்மை பற்றிய ஐயப்பாட்டை உருவாக்குகிறது. எனினும் ஒருசில புகழ்பாடும் செய்திகளைத் தவிர்த்துவிட்டு செப்பேடுகள் விவரிக்கும் சமூகத் தரவுகளை மட்டும் கவனத்தில் கொண்டால் அவை தவிர்க்கமுடியாதொரு சமூக வரலாற்று ஆவணங்களாக விளங்குவது புரியும். பாப்பம்பட்டி கரியக்காளியம்மன் கோயில் நிர்வாகத்தாரிடம் உள்ள செப்பேடு பொ.ஆ. 1883 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. இதில் சக ஆண்டு, கலியுக ஆண்டு என இரண்டு காலக்குறிப்புகள் பயின்று வந்துள்ளன. அவற்றில் கலியுக ஆண்டும், தமிழ் ஆண்டுக் குறிப்பும் பொ.ஆ. 1883 ல் தெளிவாகப் பொருந்தி வருகின்றது. செப்பேட்டின் எழுத்தமைவும் அந்த காலத்தைச் சேர்ந்தது என்பதை மூத்த கல்வெட்டு அறிஞர் திரு இராசகோபால் சுப்பையா உறுதி செய்திருக்கிறார். இந்த செப்பேடு ஆனைகுந்தி பகுதியில் சேணியருக்கும், தேவங்க செட்டியாருக்கும் இடைய நிகழ்ந்த சமூக பிரச்சனைகளையும் அதன்பொருட்டு தேவாங்கரின் ஒரு பிரிவினர் கொங்கு நாட்டு தாராபுரத்திற்கு இடம்பெயர்ந்து வந்ததையும் குறிப்பிடுகிறது. பொ.ஆ. 19ஆம் நூற்றாண்டில் இந்த சமூக சிக்கல் எதனால் ஏற்பட்டது என்பது ஆய்விற்குரியது. இங்கு கொங்கு நாட்டில் நாட்டு நிர்வாகம் முழுமைக்கும் பட்டக்காரர்களின் கையிலிருந்ததை செப்பேடு விவரிக்கிறது.

“கொங்கு நாட்டு ராசாக்கள் இருவத்தி நாலு பேரும் இவற்களில் முதன்மையாகிய கிரீடாதிபதி குமார காங்கய மண்ணாடியாரவர்களும் மற்றுமுள்ள நாடாதிபத்தியும் பெற்ற சக்கரைக் கவுண்டாநவர்கள் பல்லவராயக் கவுண்டரவர்கள் தென்கரை நாடு செட்டி வேணாயுடையாக் கவுண்டரவர்கள் பூந்துரை நாடு வாரணவாசிக் கவுண்டரவர்கள்  சேரசங்கும கவுண்டரவர்கள் மற்றுமுள்ள நாடாதிபதி பதிகளும் அனைவரும் கூடிய சமூகமாகிய தாராபுரத்தில் தில்லாபுரியம்மன் சன்னியதானத்தில் யிருந்துகொண்டு தேசத்திலுள்ள தேவாங்கருக்குப் பட்டம் செட்டிமை நேமுகம் பண்ணினபடி முன்னா ளையில்”

கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களில் காடையூர் குமார காங்கேயன், சக்கரைக் கவுண்டர், பல்லவராயக் கவுண்டர், செட்டி வேணாயுடையக் கவுண்டர், பூந்துறை வாரணவாசிக் கவுண்டர், சேரசங்கும கவுண்டர் ஆகியோர் முன்னிலையில் இந்த செப்பேடு ஆவணம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த குறிப்புகள் கொங்கு நாட்டு பட்டக்காரர்களின் வரலாற்றை எழுதுவதில் பெரிதும் துணைப்புரியும் சான்றாவணம் ஆகின்றது. மேற்குறிப்பிட்ட இரண்டு சமூகத்தாரிடையே அரசின் ஆதரவைப் பெறுவது மற்றும் பெண்களை திருமணம் செய்வது தொடர்பான சமூக சிக்கலில் ஏற்பட்ட பூசலால் தேவாங்கரின் இந்த இடப்பெயர்வு நிகழ்ந்துள்ளது. சந்தாமல்லி செட்டி என்பவர் தேவாங்கரின் சமூகத் தலைவராக சுட்டப்படுகின்றார். இவரின் தலைமையில் தான் தாராபுரத்தில் உள்ள தில்லாபுரி அம்மன் கோவில் வளாகத்தில் கொங்கு நாட்டு பட்டக்கரகர்களின் முன்னிலையில் தேவாங்கர் கூடி இருபத்தி நான்கு நாட்டிலுமுள்ள ஊர்களில் தாங்களும் குடியேறிக் கொள்ளவும், செட்டிமை நடத்திக்கொள்ளவும் உரிமைக் கோரியுள்ளனர். கொங்கு நாட்டுப் பட்டக்காரர்கள் அனைவரும் ஒருமனதாகக் கூடி அவ்வுரிமையை அளித்து ஒப்பிதம் தெரிவித்துள்ளனர். அதன்படி சந்தாமல்லி செட்டி தேவாங்கருக்கெல்லாம் சாதிப் பட்டக்காரராகவும், காங்கேய நாட்டிற்கு வாரணவாசி செட்டியும், தென்கரை நாட்டிற்கு மல்லிசெட்டியும்,  பூந்துரை நாட்டிற்கு மூக்கஞ் செட்டியும், பொங்கலூர்கா நாட்டிற்கு சவுண்டன் செட்டியும், வைய்யாபுரி நாட்டிற்கு முத்தஞ் செட்டியும், மணல்நாட்டிற்கு  நஞ்சிசெட்டியும், தட்டய நாட்டிற்கு சிக்கஞ்செட்டியும், கிளக்கு நாட்டிற்கு லிங்கிசெட்டியும், நல்லுருக்கா நாட்டிற்கு நாகிசெட்டியும், ஆனைமலை நாட்டிற்கு சென்னீசெட்டியும், வாரக்க நாட்டிற்கு அழகிரிசெட்டியும் ஆறை நாட்டிற்கு கம்பங்கூடல் கம்பிசெட்டியும், தலைய நாட்டிற்கு சங்காஞ்செட்டியும், நரைய நாட்டிற்கு சோலை செட்டியும், குருப்ப நாட்டிற்கு கொண்டிசெட்டியும், வெங்கல நாட்டிற்கு குடிசெட்டி, சேல நாட்டிற்கு ராமன் செட்டி, காவொடிக்கி நாட்டிற்கு காமன் செட்டி, அந்தியூர் நாட்டிற்கு மொண்டி செட்டி, கலங்க நாட்டிற்கு கப்பினி செட்டி, ஆத்தூரு நாட்டிற்கு அங்கஞ்செட்டி, குமரி நாட்டிற்கு செலுவ செட்டி, கருவூரு நாட்டிற்கு கரியான் செட்டி எடுவங்க(ஒடுவாங்க) நாட்டிற்கு சோர செட்டியும் செட்டிமை பெறுவதற்குரியவர் என்று முடிவு செய்திருக்கின்றனர். இதன்படி இருபத்து நான்கு நாட்டுப் பிரிவுகளிலும் வாழும் தேவாங்கர் அனைவரும் கல்யாணம், கோயில் சடங்குகள், வரி கட்டுதல் முதலியவற்றில் இவர்களின் சொல்படிக் கேட்டு நடந்துக் கொள்வார் என்றும் இந்த இருபத்துநான்கு நாட்டுச் செட்டிகளும் சாதிபட்டக்கார செட்டியான சந்தாமல்லி செட்டியின் சொல்படிக் கேட்டு நடந்து கொள்வார்கள் என்றும் ஒப்புக்கொண்டு  கையெழுத்திட்டுள்ளனர். ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்கு முன்பு இடப்பெயர்வடைந்து கொங்கு நாட்டிற்கு வந்த சமூகம் தங்களுக்கான உரிமையை இங்கு சமூக அரசியலில் வலுவாக இருந்த சமூகத்தாருடன் கூடிப்பேசி இணக்கமான முறையில் பெற்றுக்கொண்டது. இந்நிகழ்வு தில்லாபுரி அம்மன் மற்றும் அருமணநல்லூர் கரியகாளியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
கௌசிகா ஆற்றங்கரையில் அமையப்பெற்றிக்கும் பாப்பம்பட்டி ஊரானது பொ.ஆ. 1500 முதல் பல சமூகங்கள் கூட்டாக வாழ்ந்த ஊராக விளங்கியிருக்கிறது. கௌசிகா ஆற்றங்கரையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துவரும் சூழலில் வரலாற்றுக் காலத்தில் புதிதாக பல சமூகங்கள் இடப்பெயர்வு கண்டு இங்கு வந்து குடியமர்ந்துள்ளனர். பல சமூகங்கள் ஓரிடத்தில் வாழும் சூழல் உருவாகும் போதே அவர்களுக்கான சமூக உறவுகள் குறித்த ஒப்பந்தங்கள், பரிமாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் உருவாகின்றது. அதன் பொருட்டே கல்வெட்டு, நாணயங்கள், செப்பேடு போன்ற சமூக ஆவணங்கள் கிடைக்கத் தொடங்குகின்றன.

யாக்கை

ஆரியரும் தமிழரும் – பாகம் 9- விக்கி கண்ணன்

இந்த தொடரில் இதுவரை சிந்துவெளிக்கு முற்பட்ட காலத்தில் ஆரிய டிஎன்ஏ என அறியப்படும் ‘ஸ்டெப்பி’ இந்தியாவிற்கு வெளியில் கிமு 3000 முதலே கிடைத்திருப்பதையும் ,ஆனாலும் அவை இராக்கிகடியில் கிடைத்த கிமு 2500ஐ சேர்ந்த டிஎன்ஏ மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை என்பதையும் காட்டி சிந்துவெளி நாகரீக காலத்தில் ஆரிய குடியேற்றம் இந்தியாவில் நிகழவில்லை என்பதை பார்த்திருந்தோம். அதை தொடர்ந்து சிந்துவெளி நாகரீகம் முழுவதும் வீழ்ந்தபின் கிமு 1300 – 1000 வாக்கில் தான் ஆரிய குடியேற்றம் நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதையும் பதிவு செய்திருந்தோம்.

சிந்துவெளியில் ஏற்கனவே இருந்த தெற்காசிய வேட்டை சமூகத்துடனும்/விவசாய சமூகத்துடனும் ‘ஸ்டெப்பி’ டிஎன்ஏ வைக்கொண்ட ஆரியர்கள் கலந்து உருவானதே இன்றைய வட இந்தியர்கள். ஆகையால் வட இந்தியர்களில் பெரும்பான்மை உயர்சாதிகளின் டிஎன்ஏ வில் ஸ்டெப்பி மரபணு உண்டு. இப்படி ஆரிய குடியேற்றம் வட மேற்கில் நடந்து அது கங்கை சமவெளி நோக்கி நகர்ந்தது. இப்படி புதிதாக குடியேறிய ஆரியர்களின் தேசமாக வட இந்திய பகுதிகள் (குறிப்பாக கங்கை சமவெளி) அமைந்துவிட்டதால் அது ஆரிய வர்த்தமாக குறிக்கப்பட்டது. சென்னையில் குடியேறிய பனியாக்களின் பகுதியை சௌகார்பேட்டை என குறிப்பிடுவதுபோல, ஆரியர்கள் குடியேறி அங்குள்ளவர்களுடன் கலந்துவிட்டதால் வட இந்திய பகுதிக்கே அந்த பெயர் ஏற்பட்டுவிட்டது என்பதாக தெரிகிறது.

ஆனாலும் சிலம்புவில் வரும் ஆரியர் எனும் சொல்லாடலை வரலாற்று கால சம்பவங்களுடனும் அச்சம்பவம் நடைபெற்ற காலத்துடனும் பொருத்தி பார்க்கும்போது, அதில் வரும் ‘ஆரிய அரசர்கள்’ பிராமணர்களாக அமைந்திருப்பது குறித்து ஏற்கனவே விவாதித்து விட்டோம். இனி இடைக்கால வரலாற்றில் ஆரியர் – தமிழர் குறித்து வரும் பகுதிகளை காண்போம்.

ஆரியர்களின் மொழியை இந்தோ-ஆரிய மொழிக்குடும்பம் என்றும் தமிழர்களின் மொழியை திராவிட மொழி குடும்பம் என்றும் கூறுவர். இதில் திராவிட மொழி குடும்பம் என்பதன் மூல மொழி தமிழ். இதுகுறித்து தனியொரு பதிவை மொழியியல் ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் காண்போம்.

இந்த இருவேறு மொழி குடும்பத்தையும் தனித்தனியாக பிரித்து கூறும் மரபு இடைக்கால வரலாற்றில் அநேக இடங்களில் வருகிறது. இவ்வாறு ஆரிய மொழியை ஏற்றோர் ஆரியர் என்றும் தமிழை ஏற்றோரை தமிழர் என்றும் அக்காலத்தவர்கள் சுட்டியிருப்பதாக தெரிகிறது.

திருமறைக்காடு பதிகத்தில்,

“#ஆரியன் கண்டாய் #தமிழன் கண்டாய்” – 6:23:5 என திருநாவுக்கரசர் இருவேறு மரபுகளை பிரித்து கூறுகிறார்.

பொதுவாக ‘ஆரிய’ என்பதற்கு உயர்ந்த எனும் பொருளை வழங்குவார்கள். இவ்விடத்தில் எங்ஙனம் உயர்ந்த எனும் பொருளை வழங்க முடியும்? தமிழன் என்பது மொழி அடையாளத்தை சுட்டுகிறது. எனில் ஆரியன் என்பதற்கும் அப்பொருள் தானே வழங்க இயலும். அப்படி பொருள் கொண்டால் சைவ சமய குரவரான அப்பர் பிரானே இருவேறு மரபையல்லவா குறிப்பிட்டு காட்டுகிறார்.

கிபி 6-7ஆம் நூற்றாண்டை சேர்ந்த அப்பரின் பதிகத்தில் காணும் இந்த பேதம் கிபி 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜனின் தஞ்சை கல்வெட்டிலும் காண முடிகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு 400 தளிச்சேரி பெண்டுகளை குடியமர்த்தி அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக்கொடுத்து அவர்கள் நடனமாடும் போது இடையே ஆரியம் – தமிழ் என இரண்டு மொழியில் பாடுவதற்கு நிவந்தம் தந்திருக்கிறார்கள்.

“#ஆரியம் பாடுவார் மூவர்க்கு அரையன் அம்பலநாதன் ஆன செம்பியன் வாத்யமாராயனுக்குப் பங்கு நாலரையும்,
#தமிழ் பாட ஒருவனுக்குப் பட்டாலகன் காமரப் பேரையனுக்கு பங்கு ஒன்றரையும்” – தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 2 – எண் 66.

தளிச்சேரி பெண்டுகளுக்காக இருமொழிகளில் பாடல்கள் பாடுவது தனி. இவையல்லாது கோவிலில் திருப்பதியம் (தேவாரம்) பாட 48 பேரை நியமித்திருக்கிறான் இராஜராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை

“ஸ்வஸ்திஶ்ரீ இராஜராஜதேவருக்கு யாண்டு இருபத்தொன்பது வரை உடையார் ஶ்ரீராஜராஜேஸ்வரத்து உடையாருக்கு #திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய உடையார் ஶ்ரீராஜராஜதேவர் குடுத்த பிடாரர்கள் #நாற்பத்தெண்மரும் இவர்களில் நிலையாய் உடுக்கைவாசிப்பான் ஒருவனும் இவர்களில் நிலையாய் கொட்டி மத்தளம் வாசிப்பான் ஒருவனுமாக ஐம்பத்தின்மருக்கு நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய்..” – தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 2 – எண் 65.

இங்கு பாடப்பட்ட ஆரியம் என்பது வடமொழியாக இருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது. ஆனால் தளிச்சேரி பெண்டுகளின் நாட்டியங்களில் ஆரியம் பாடுவது தவிர்த்து இக்கோவிலில் வேறெங்கும் அவை பாடப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

இது தவிர்த்து பக்தி இலக்கியங்களில் பயின்று வரும் ‘ஆரியர்’ எனும் சொல்லாடல் குறித்து அடுத்த சில பதிவுகளில் காண்போம்!

ஆரியரும் தமிழரும் – பாகம் 8- விக்கி கண்ணன்

இதுவரையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய/ கல்வெட்டு / மானுடவியல் ஆய்வுத் தரவுகளை பார்த்தோம். இக்கட்டுரையில் ஆரியருக்கும் தமிழருக்குமான நுணுக்கமான அரசியலையும் அதில் மக்கள் எவ்வாறு திசைதிருப்ப பட்டனர் என்பதையும் காண்போம்.

பொதுவாக அனைவருக்குமே பொன்னியின் செல்வன் நாவல் பற்றி தெரிந்திருக்கும். பெரும்பான்மையானோர் அதனை வாசித்து மகிழ்ந்திருப்பர். அந்த முழு நாவலின் சாரமே ஆதித்த கரிகாலனின் கொலையை சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும். பாகுபலி முதல் பாகத்தின் முடிவில் “Why Kattappa killed bahubali?” எனும் திருப்பத்துடன் இராஜமௌலி முடிந்திருப்பதே, கல்கி கட்டமைத்த “Who killed Aditha Karikala?” எனும் plot-ல் இருந்து தான். ஆனால் கல்கி மிக நேர்த்தியாக அந்த விடயத்தினை கையாண்டிருப்பார்.

அதாவது கிபி 10 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதலாம் பராந்தக சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இராஜசிம்ம பாண்டியனை தோற்கடிக்கிறார். தோற்ற பாண்டியன் ஈழத்தில் தஞ்சமடைகிறான். பராந்தகன் விடுவதாக இல்லை. ஈழத்தையும் வெற்றிக்கொள்கிறார். அதனால் ‘மதிரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி’ எனும் பட்டம் தரிக்கிறார். பாண்டியனுக்கு இந்த படுதோல்வி உறுத்துகிறது. இராஜசிம்ம பாண்டியனின் மகனான வீரபாண்டியன் சோழத்தின் மீது போரிடுகிறான். முடிவில் சோழனின் தலையை கொய்து ‘சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன்’ என பட்டம் தரிக்கிறான். இந்த தலைவாங்கப்பட்ட சோழன் , பராந்தக சோழனின் இளைய மகனான உத்தமசீலி என கருதப்படுகிறது.

இது சோழத்துக்கு இழுக்காக அமைகிறது. பாண்டியனின் தலையை வாங்கியே தீர வேண்டும் எனும் தீரா பகை சோழ நாட்டுக்கு ஏற்படுகிறது. பராந்தகனுக்கு பிறகு குறுகிய கால இடைவெளியில் நான்கு சோழ அரசர்கள் ஆண்டுவிட்டார்கள். ஆனால் ஒருத்தரும் பாண்டியனை பழிதீர்க்கவில்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகால பழியை தீர்க்க முற்படுகிறார் ஆதித்தகரிகாலன். நினைத்ததை போலவே ‘வீரபாண்டியன் தலைக்கொண்ட கோப்பரகேசரி’ ஆகிறார். இதன்பிறகு தொண்டைமண்டலத்தை தனியே 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்ததாக கல்வெட்டுகள் பகர்கின்றன. ஆனால் திடீரென கொல்லப்படுகிறார் ஆதித்தகரிகாலன். இந்த கதையை படிக்கும் வாசகர்களுக்கு “Who killed aditha karikala?” என்று கேட்டால் என்ன பதில் வரும்? பெரும்பான்மையானோர் நாவலை ஆழ்ந்து படித்துக்கொண்டிருக்கும் மனநிலையில் “பாண்டியநாட்டு ஆபத்துதவிகள்” தான் இந்த வஞ்சக செயலை செய்திருக்க வேண்டும் என கூறுவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. நாவலுக்கும் வரலாற்றுக்குமான வேறுபாடு இங்கே தான் தொடங்குகிறது.

இராஜராஜன் கிபி 985இல் பட்டத்திற்கு வருகிறார். தனது இரண்டாவது ஆட்சியாண்டில் காட்டுமன்னார்கோவில் அருகே உடையார்குடி கல்வெட்டில் , “பாண்டியன் தலைக்கொண்ட கரிகால சோழனை கொன்ற #துரோகிகளான சோமன் , இவன் தம்பி இரவிதாசனான பஞ்சவன் #பிரம்மாதிராஜனும், இவன் தம்பி பரமேஸ்வரனான #இருமுடிசோழ #பிரம்மாதிராஜனும் இவன் உடன்பிறப்பு மலையனூரானும்” என கல்வெட்டு நீள்கிறது. (முழு கல்வெட்டு மறுமொழியில்)

இவர்கள் எல்லாம் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனைகள் தரப்பட்டுவிட்டது. ஆனால் எப்போது? யாரால்? என்ன தண்டனை தரப்பட்டது? போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க எவ்வித சான்றுகளும் இல்லை. ஏன்? எதற்கு கொன்றார்கள்? என்பதற்கும் எவ்வித சான்றுகளும் இல்லை. ஆனால் கட்டாயமாக இவர்களுக்கு கடுமையான தண்டனையே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை சொல்ல முடியும். கூடவே பாண்டியர்களால் அனுப்பப்பட்ட ஆபத்துதவிகள் இவர்கள் இல்லை என்று காட்டமாக மறுத்துவிடவும் முடியும். அதைவிட ஆணித்தரமாக ஆதித்த கரிகாலனை கொன்றது, தங்களை தனித்துவமான ஆரிய இனம் என இத்தனை காலமாக காட்டிக்கொண்டுவரும்  பிராமணர்களே என்பதையும் கூறமுடியும்.

அதாவது உடையார்குடி கல்வெட்டு என்பது, இராஜராஜன் ஆட்சியில் உடையார்குடி ஊர்சபைக்கு அம்மன்னனால் அனுப்பப்பட்ட ஶ்ரீமுகம் (ஓலை) தான். அதில் கரிகாலனை கொன்ற துரோகிகளின் பெயர்கள் காணப்படுகிறது. அவர்களுக்கு உடந்தையாக இருந்த உடன்பிறந்தோர், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவர்களுக்கு பெண் கொடுத்து பெண் எடுத்த பங்காளிகள், மாமன் மச்சான்கள் என எல்லாருடைய சொத்துக்களும் வீடுகளும் அரசாங்கத்தால் எப்போதோ கைப்பற்றப்பட்டு விட்டது. அதாவது இராஜராஜன் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கூட இது நடந்துவிட்டிருக்கலாம். இராஜராஜன் காலத்தில் அப்படி கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு அன்றைய தேதியில் என்ன விலைக்கு அது போகுதோ அந்த விலைக்கு அதனை விற்றுவிட கூறி ஓலை அனுப்புகிறார். இவ்வளவு தான் அதில் இருக்கும் விடயம். ஆனால் கைப்பற்றப்பட்ட நிலம் எங்குள்ளது என்றால் “வீரநாராயண சதுர்வேதிமங்கலத்தில்” இருக்கிறது. அதுமட்டுமின்றி கல்வெட்டிலேயே நேரடியாக ‘இவர் பிராமணிமார் பேராலும்’ எனும் வரி (2வது வரி) மூலம் கொன்றவர்கள் யார் என்றும் அப்பட்டமாக தெரிந்துவிடுகிறது.

அதாவது கொலை செய்தவர்களின் அங்கம் பங்காளிகள், மாமன் மச்சான்களின் நிலைமையே இத்தனை மோசமாக இருக்க, கொன்றவர்களின் நிலையை யோசித்து பார்க்கவும். பலர் மனுதர்மத்தை மீறாக்கூடாது என பிராமணர்களின் சொத்தை மட்டும் வாங்கிக்கொண்டு சோழர்கள் விரட்டியிருக்க வேண்டும் என எழுதுகிறார்கள். ஆனால் அது ஒரு பச்சை கட்டுக்கதை. ஏனெனில் இராஜராஜனும் இராஜேந்திரனும் சாளுக்கிய சத்யாசிரியனுடனான போரில் பிராமணர்களை கொடூரமாக கொன்றதை சாளுக்கிய மன்னனே தனது கல்வெட்டில் பதிவு செய்திருக்கிறான் (Hottur Inscription). ஆகையால் ‘மனுதர்மமாவது மண்ணங்கட்டியாவது’ என்று தான் சோழர்களின் ஆட்சி இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

அதுபோக இந்திய வரலாறு நெடுகிலும் வாரிசுரிமை சண்டையால் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால் ஒருபோதும் எதிரி நாட்டு மன்னர்களை இப்படி கூலிப்படை (ஆபத்துதவிகள்) அனுப்பி கொன்றதாக வரலாறே இல்லை. குறிப்பாக தமிழக மூவேந்தர்கள் வரலாற்றில் இல்லவே இல்லை. இதற்கு பல எடுத்துக்காட்டுகளை தரமுடியும்.

1. கண்ணகிக்கு நீதி வழங்காத பாண்டியன் உயிர் துறந்தான். பாண்டியன் நீதி வழுவியதை சேரன் கொண்டாடுகிறான். கண்ணகிக்கு கோவில் எடுத்து பாண்டியனின் நீதிவழுவிய செயலை ஆவணப்படுத்த துடிக்கிறான். (ஆனால் பாண்டியன் சோழனை கொன்ற இழிசெயலை இராஜராஜன் பதிவு செய்யவில்லை என்பது முரண்)

2. பராந்தக சோழனால் துரத்தப்பட்ட இராஜசிம்ம பாண்டியனின் மகன் கூலிப்படை அனுப்பி சோழனின் தலையை வாங்கவில்லை. அவனே நேருக்கு நேர் நின்று வெற்றிப்பெற்று தான் அந்த புகழை பெறுகிறான். இத்தனைக்கும் சோழம் அப்போது பாண்டிய நாட்டை காட்டிலும் பன்மடங்கு பலமானது.

3. இடைக்கால சோழர்கள் பாண்டிய நாட்டை சின்னாபின்னமாகி வைத்தாலும் பிற்கால பாண்டியன் (மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்) தஞ்சையை தீக்கிரையாக்கினான். கூலிப்படையோ ஆபத்துதவிகளையோ அனுப்பி புறமுதுகில் குத்தவில்லை.

இப்படி ஓராயிரம் சான்றுகள் தமிழக மூவேந்தர்களின் நேருக்கு நேரான வீரத்தினை குறித்து காட்ட முடியும். அதையும் தாண்டி பாண்டியன் இப்படி ஒரு செயலை செய்திருப்பான் என்றால் அது சோழர்களால் தொடர்ச்சியாக சொல்லிக்காட்டப்பட்டிருக்கும். அது கடைசி வரை பாண்டய குலத்திற்கே அவமான அடையாளம். ஆனால் இராஜராஜன் கல்வெட்டில் ‘துரோகிகளான’ என்று குறிப்பிட்டுவிட்டு ‘பஞ்சவன் பிரம்மாதிராஜன்’, ‘இருமுடி சோழ பிரம்மாதிராஜன்’ என சோழர்களின் உயர் பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளின் பட்டங்களையும் சேர்த்தே குறிக்கிறான். எங்குமே பாண்டியனை பற்றி இல்லை. துரோகிகள் என குறித்து சொல்லும் போதே அது உள்நாட்டு பிரச்சனை என்பதாகிவிடுகிறது. இதனை விளக்க வேண்டியதே இல்லை.

ஆனால் ஏன் கொல்லனும்? அதற்கு ஆயிரம் அனுமானங்களை முன்வைக்கலாம். எத்தனையோ காரணங்களை கற்பிதம் செய்யலாம். அதையெல்லாம் விடுத்து கல்கி ஏன் “பாண்டிய ஆபத்துதவிகள்” என்று எழுதினார் என்பதை உங்கள் புரிதலுக்கே விட்டுவிடுகிறேன். அவர் அப்படி எழுதியதின் விளைவே இன்று வரை பாண்டியநாட்டு ஆபத்துதவிகள் என்று ஒரு மாபெரும் கேடுகெட்ட வரலாற்று பழியை பாண்டிய மன்னனுக்கு கொடுத்துவிட்டார்கள். இத்தனைக்கும் அதற்கு முகாந்திரமே இல்லை. இதுவே பிராமணர்கள் அல்லாது வேறு சமூகம் இந்த செயலை செய்திருக்குமானால் இந்த வரலாற்று பழி இதே கோணத்தில் மட்டுமே பிண்ணப்பட்டிருக்குமா? அனைத்தும் உங்கள் அனுமானத்திற்கே விட்டுவிடுகிறேன்.

மங்காத புகழ் படைத்த பாண்டியனின் வரலாற்றை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பழியை மொத்தமாக சுமத்தி மீண்டும் ஒருமுறை எழுத்தால் முதுகில் குத்தியிருக்கிறார்கள். கத்தி முனையைவிட பேனா முனை கூர்மையானதல்லவோ!

தமிழர்களான மூவேந்தர்களும் தங்களுக்குள்ளாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதும் அதில் தோற்றவர்கள் பழிதீர்ப்பதும் போர்களத்தில் நடந்ததே ஒழிய புறமுதுகில் நடத்தப்பட்டதல்ல. ஆனால் ஆரிய அரசர்களின் வரலாற்றை எடுத்துப்பாருங்கள். மௌரியனின் உடனிருந்து வீழ்த்தியவன் ஆரியனான சுங்கன். சுங்கனை கூட இருந்தே காலி செய்தவன் ஆரியனான கண்வன்.

தமிழர்களையும் தமிழ்நாட்டையும் இதுவரை நேருக்கு நேர் நின்று வெற்றிக்கொண்ட கடைசி வேற்று மொழியினன் மேலை சாளுக்கியன் மட்டுமே! அதற்கு பிறகு துரோகத்தால் மட்டுமே வீழ்ந்தது தமிழினம்!!

தொடருவோம்..

ஆரியரும் தமிழரும் – பாகம் 7- விக்கி கண்ணன்

கடந்த பாகத்தில் சிந்துவெளியில் ஆரிய குடியேற்றம் நிகழ்ந்த காலத்தையும் அதன்பின் ஆரியத்துக்கான ‘ஸ்டெப்பி’ மரபணுவானது இன்றைய வட இந்தியர்களின் மரபணுவில் எந்தளவுக்கு கலந்துள்ளது என்பதையும் பார்த்தோம். இந்த பதிவில் ‘ஆரிய’ என்கிற சொல் எப்போதிருந்து முதன்முதலாகவும் பெருமைக்குரிய சொல்லாகவும் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை காண்போம்.

ஈரானிய கடவுளர்களுக்கும் வேத கடவுளர்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் இதுவரை வெளிவந்துள்ளன. இன்றைக்கு ‘ஸ்டெப்பி’ மரபணுவைக்கொண்ட இனக்குழுக்களில் இன்றைய ஈரானியர்களும் வட இந்தியர்களும் முக்கியமானவர்கள். கிமு 1500-1000 வாக்கில் சிந்துவெளி வீழ்ந்த பின்னர் ஆரியர்கள் சிந்துவெளி பகுதியை நோக்கி புலம்பெயர்ந்ததை பார்த்தோமல்லவா, அதுபோல இன்றைய ஈரானிலும் ஆரிய குடியேற்றம் நிகழ்ந்தது. கிமு 5 ஆம் நூற்றாண்டில் ஈரானை ஆட்சிசெய்த டாரியஸ் எனும் மன்னனது கல்வெட்டொன்று இன்றும் ‘Behistun inscription’ என்ற பெயரில் ஈரானில் காணப்படுகிறது. அக்கல்வெட்டில் டாரியஸ் தன்னை பாரசீகத்தை சேர்ந்த ‘ஆரிய இனத்தவன்’ என  குறிப்பிட்டுக்கொள்கிறான். (மறுமொழியில் பார்க்க)

வரலாற்று ரீதியாக முதன்முதலாக, தான் ஒரு ஆரிய இனத்தவன் என குறிப்பிட்டுக்கொண்டவன் டாரியஸ் தான். ஈரானிலும் கூட இந்தியாவில் நடப்பதை போலவே ‘ஆரிய’ இன அரசியலுக்கு ஆதரவு/எதிர்ப்பு என்ற இரண்டு நிலைப்பாடுகளும் உண்டு. ஆனாலும் டாரியஸ் தன்னை ஆரிய இனத்தவனாக கூறிக்கொண்டது ஈரானில் ஆரியத்துக்கான நேரடி வரலாற்று சான்றாக அமைகிறது. அதனை ஆமோதிக்கும் வகையில் வேத கடவுளோடு ஈரானிய கடவுளும் ஒத்துப்போவதை கவனிக்க வேண்டும்.

மத்திய ஆசியாவில் இருந்து குதிரையை கொண்டு வந்தது ஆரியர்களே எனும் கூற்று ஈரானிய வரலாற்று பக்கங்களிலும் உண்டு. ஆனால் ஆரியத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஈரானியர்கள் பலர் கிமு 17000வாக்கிலேயே பாறை ஓவியங்களில் குதிரையை காட்டி, இந்த ஆரிய குதிரைக் கதையை முற்றிலுமாக மறுத்துவிட்டனர். ‘குதிரை’ விடயத்தை பொறுத்தவரை இந்தியாவிலும் கூட ஆரிய வருகைக்கு முன்பே பல்வேறு பாறை ஓவியங்களில் குதிரைகள் கிடைத்திருக்கின்றன. ஸ்டெப்பி மரபணுவின் படி ஆரிய இனமே கிமு 1500-1000 இடைப்பட்ட காலத்தில் தான் இந்திய துணைக்கண்டத்திற்குள் ஊடுருவுகிறது. இந்திய பாறை ஓவியங்கள் மிக எளிதாக இந்த காலத்தை தாண்டிவிடும். ஆகையால் ஆரியத்தின் முகமாக காட்டப்படும் குதிரை தியரி என்பது   அறிவியல் பூர்வமாகவே போலியான ஒன்று. இதனை முன்னிருத்தி தான் சிந்துவெளி முத்திரையில் ஆரியத்தை நிறுவ போலியாக குதிரையை வடிவமைத்து கேலிக்குள்ளானார் ஒருவர்.

ஈரானில் ஆரியத்துக்கு ஆதரவான தரப்பு ‘ஆரிய’ எனும் வார்த்தை தான் மருவி ‘ஈரானிய’ என்றானது என்பர். ஆரியர் யார் எனும் குழப்பம் ஈரானிலும் அரசியல் நிலைப்பாட்டை தீர்மானிக்கிறது.

கிமு 5ஆம் நூற்றாண்டில் ஈரானில் டாரியஸ் எனும் மன்னன் தன்னை ஆரியனாக முன்மொழிந்துக்கொண்ட அதே சமயத்தில், தென்னகத்தில் தமிழ் சமூகம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்தது. செழுமையான இலக்கியங்கள் படைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பானை செய்யும் குயவனும் எழுத்தறிவு பெற்றிருந்தான். உலகின் அனைத்து இனங்களின் வரலாறுகளும் மன்னர்களின் கல்வெட்டுக்கள், பிரமிடுகள், இலக்கியங்கள் என மேல்நிலை சமூகத்தின் எச்சங்களை கொண்டு மட்டுமே அறியப்படுகின்றன. ஆனால் தமிழினம் மட்டுமே பாமர மக்களும் எழுத்தறிவு பெற்றதை பானை ஓட்டின் வழியே பதிவு செய்துள்ளது. இங்கு அறிவார்ந்த சமூகமும் பாமர சமூகமும் போட்டி போட்டுக்கொண்டு  தொல்லியல்/ வரலாற்று சான்றுகளை வாரி வழங்கி வருகின்றன.

பானைகளில் எழுதிய வழக்கத்தின் நீட்சியே இன்றும் கல்யாண சீர்வரிசைகளில் பெயர் எழுதும் வழக்கம். இது கோவிலுக்கு வழங்கும் 40வாட்ஸ் பல்ப்,  சீலிங் ஃபேன் வரை நீண்டிருப்பது சற்று வேடிக்கையாக இருந்தாலும் இவ்வழக்கம் நம் மரபணுவிலேயே கலந்துவிட்டது அதனை மாற்றவே முடியாது என கடந்துவிடலாம்.

எப்போதும் அறிவார்ந்த சமூகம் இவ்வாறு எழுதும் பாமர மக்களின் வழக்கத்தினை சற்று வேடிக்கையாக தான் பார்க்கும். ஆனால் பாருங்கள் அறிவார்ந்த சமூகம் பயன்படுத்திய ஓலைச்சுவடிகளின் ஆயுள் குறைவு. இன்று அது ‘காணாமல் கூட’ போகுது. ஆனால் பானை ஓடுகள் அழுத்தமாக அதன் வரலாற்றை பதிவு செய்கின்றன.

இன்று புறநானூறுகளும் அகநானூறுகளும் கூட பல செய்யுளுக்கு எழுதியவர் பெயர் தெரியாமல் திகைக்கின்றன. அது பதிவு செய்யும் வரலாற்று தகவல்களின் நம்பகத்தன்மையையும் இன்றுள்ள அதே அறிவார்ந்த சமூகம் கேள்விக்குள்ளாக்கி ஒதுக்கி வைத்துவிடும். ஆனால் பானை ஓட்டில் கிடைக்கும் ‘கண்ணனும்’ ‘ஆதனும்’ ‘திசனும்’ தமிழின வரலாற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுகின்றன.

பாமர சமூகத்தின் வீச்சு என்பது அறிவார்ந்த சமூகத்தினையும் சமயங்களில் அடித்து நொறுக்கிவிடும் என்பதற்கு தமிழக அகழ்வாய்வுகளே சிறந்த சான்று.

தொடருவோம்..

ஆரியரும் தமிழரும் – பாகம் 6- விக்கி கண்ணன்

இதுவரை சங்க இலக்கிய தரவுகளை கொண்டு ஆரியத்தையும் தமிழையும் தனித்தனியாக பார்த்தோம். இந்த பதிவில் சமீபத்தில் வெளியான இராக்கிகடி ஆய்வு முடிவினை கொண்டு ஆரியத்தையும் தமிழையும் கூடவே சிந்துவெளியையும் எவ்வாறு புரிந்துகொள்வது என பார்ப்போம்.

உலகில் மனிதன் முதன்முதலில் ஓரிடத்தில் தோன்றி தான் உலகம் முழுவதும் பரவியிருக்க முடியும் என்பது அறிவியல் ஏற்றுக்கொண்ட கருத்து. தோன்றிய இடமாக ஆப்ரிக்காவை கூறுவர். ஆனால் ஒரேயொரு முறை மட்டுமே இந்த இடப்பெயர்வு ஆப்ரிக்காவில் இருந்து உலகம் முழுமைக்கும் நடந்துவிடவில்லை. பல மில்லியன் ஆண்டுகள் இடைவெளியில் தொடர்ச்சியாக வெவ்வேறு இனக்குழுக்களாக இந்த இடப்பெயர்வு நடந்துள்ளது என்பது தான் அறிவியல் கூறும் உண்மை. ஒரு இடப்பெயர்வுக்கும் அடுத்த இடப்பெயர்வுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெயர்ந்த குழுக்கள் தாங்கள் குடிபெயர்ந்த இடம், அங்குள்ள தட்பவெப்ப நிலை, உணவு போன்றவைகளை கொண்டே அதன் மரபணு வளர்ச்சி அடையும். இதுவே பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு, தான் வெளியேறிய இடத்தில் இருக்கும் இனக்குழுவின் மரபணுவிற்கும் இடம்பெயர்ந்த இனக்குழுவின் மரபணுவிற்குமான மாற்றங்கள் எளிதில் வித்தியாசம் காணும் வகையில் அமையும். இதுவே உடற்கட்டு, மூளையின் எடை, அறிவுத்திறன், தோல் நிறம் முதல் பண்பாட்டு, கலாச்சார மாற்றத்தினை வேறுபடுத்தி காட்டும். இந்த அடிப்படையை புரிந்துக்கொண்டால் அடுத்து நாம் பார்க்க போகும் விடயங்கள் புரியலாம்.

கடந்த ஆண்டு பேராசிரியர் வசந்த் ஷின்டே உட்பட பல அறிஞர்கள் இணைந்து வெளியிட்ட ஆய்வு முடிவினை கொண்டு இதனை பார்ப்போம். ஹரப்பா நாகரீகத்தில் ஆரிய இனக்குழுவிற்கான ‘ஸ்டேப்பி’ DNA கிடைக்கவில்லை. இது தான் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கும் பல முக்கியமான செய்திகளில் ஒன்று. பின் ஹரப்பா நாகரீகம் யாருடையது? எனும் கேள்வி எழலாம்.

கிமு 12000-10000 வாக்கில் அனத்தோலியாவில் இருந்து ஒரு இனக்குழு மத்திய தரைக்கடல் ஊடாக கிழக்கு பாகிஸ்தான், தெற்கு ஆப்கானிஸ்தான், மேற்கு இந்தியாவை உள்ளடக்கிய பகுதியை நோக்கி வருகிறது. அந்த இனக்குழு மரபுடன் ஏற்கனவே தெற்காசியாவில் இருந்த இனக்குழு ஒன்றுடன் ஒன்று கலந்து உருவானது தான் சிந்துவெளி நாகரீகம். இந்த கலப்பை எவ்வாறு கண்டறிந்தனர்? எனும் கேள்வி எழலாம். அனத்தோலியா (Iranian) DNA எங்கெல்லாம் இருந்து எடுக்கப்பட்டது என்பதனை மறுமொழியில் 87:13 என்கிற படத்தில் காணவும், அதில் Belt Cave, shahr-i-sokha போன்ற இடப்பெயர்கள் அடைப்பில் குறிக்கப்பட்டிருக்கும். அந்த இடங்களில் கிடைத்த மரபணு மாதிரிகளுடன் இராக்கிகடி மரபணு ஒத்துப்போகிறது.

அனத்தோலியாவில் வேட்டை சமூகம் விவசாய சமூகம் என இரண்டுமே இருந்தது. அதுபோல் தெற்காசியாவிலும் வேட்டை சமூகம் விவசாய சமூகம் என இருந்தன. இவை கிமு 10000 முதல் கிமு 5000 வரையில் ஒன்றுடன் ஒன்று (87%:13%) கலந்து, அதன் பின்னரே கிமு 3500(Early Harappan Phase) வாக்கில் ஹரப்பா நாகரீகம் மெல்ல வளர்ச்சியுற்றது.

இவை கிமு 2800 – 1900 வரை செழிப்பான (Matured Harappan phase) ஒரு நாகரீகத்தினை கொண்டிருந்தது. அதன்பின்னர் கிமு 1100 வாக்கில் (Late harappan) முழுவதுமாக அந்நாகரீகம் வீழ்ச்சியுற்றது. இதில் கிமு 1500 அல்லது அதற்கு பின்னான காலத்தில் தான் ஈரானின் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து மீண்டும் ஒரு இனக்குழு சிந்துவெளி வளர்ச்சியுற்றிருந்த இடத்தினை நோக்கி வருகிறது. இந்த இனக்குழு வருவதற்கு முன்பே சிந்துவெளியின் வீழ்ச்சி தொடங்கியிருந்தது. சிந்துவெளியின் வீழ்ச்சியானது இயற்கை பேரிடரால் நடந்தது என்பதே பலரும் இதுநாள் வரை முன்வைக்கும் கருத்து. ஆகவே இந்நாகரீகம் வீழ்ந்த பின்னர் அம்மக்கள் தென்னிந்தியா, தென்கிழக்காசியா நோக்கி பெருமளவு நகரத்தொடங்கினர். ஏற்கனவே சிறிய அளவில் தெற்காசிய வேட்டை சமூகமும் விவசாய சமூகமும் அனத்தோலிய இனக்குழுவுடன் கலந்திருந்தனர் என பார்த்தோம் அல்லவா. இந்நாகரீகம் வீழ்ந்த பின்னர் பெருமளவு தென்னிந்திய (தெற்காசிய) இனக்குழுக்களுடன் சிந்துவெளி மக்கள் கலந்துவிட்டனர். இப்படி உருவானதே (ASI) என கூறப்படும் தென்னிந்திய சமூகம்.

கிமு 1500க்கு பின் வந்த ஸ்டெப்பி இனக்குழுவை சேர்ந்த ஆரியர்களும் சிறிய அளவில் சிந்துவெளி(late harappan peoples) மக்களும் இன்றைய வடக்கு இந்தியாவில் அன்றிருந்த தெற்காசிய வேட்டை சமூகத்துடனும் கலந்து உருவானதே (ANI) என கூறப்படும் வட இந்திய சமூகம். ஆகவே தான் சங்க இலக்கியங்களில் விந்தியத்திற்கு வடக்கேயுள்ள பகுதியை ஆரிய தேசம் என்றும், அங்குள்ள மன்னர்களை ஆரிய மன்னர்கள் என்றும் பதிவு செய்கிறது.

மற்றொன்றையும் கவனித்தால் சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய முத்திரைகளும் இதுநாள் வரை படித்தறிய முடியாமல் இருக்கிறது. அதேசமயம் ஸ்டெப்பி இனக்குழு இந்தோ-ஈரானிய மொழிக்குடும்பமாக அறியப்படுகிறது. ஈரானிய கடவுள்கள் பெருமளவு வேத கடவுள்களுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.

இவையனைத்துக்கும் ஆதாரமாக தான் இராக்கிகடியில் கிமு 2300-2500 ஆண்டை சேர்ந்த Matured harappan நாகரீக காலத்தில் கிடைத்த எலும்புகூட்டில் ஸ்டெப்பி DNA காணப்படவில்லை என ஆய்வறிஞர்கள் தங்களது முடிவை வெளியிட்டார்கள். அதாவது கிமு 3000-4000 காலத்திலேயே ஸ்டெப்பி மரபணுவானது ஈரானில் கிடைக்கிறது. ஆனால் ஆரிய நாகரீகமாக முன்மொழியப்பட்ட ஹரப்பா நாகரீகத்தில் ஆரியத்துக்கான ஸ்டெப்பி DNA கிடைக்கவில்லை.

இன்றைய வட இந்திய மக்களின் மரபணுவில் ஸ்டெப்பி டிஎன்ஏ கிடைக்கிறது. தென்னிந்திய மக்களின் மரபணுவில் இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கும். ஏனெனில் ஆரிய இனத்தின் தாக்கம் இங்குமே உண்டு. ஆனால் வட இந்திய மக்களின் மரபணுவில் அதிகளவில் கிடைக்கும் ஸ்டெப்பி DNA வின் சதவீதமானது தென்னிந்திய மக்களின் மரபணுவில் மிகமிக குறைவானதாகவோ அல்லது அரிதாகவோ கிடைக்கும். ஆதலால் தான் மொழியியலில் வட இந்திய மொழிகளை Indo-European மொழி என்றும், தென்னந்திய மொழிகளை Dravidian மொழிகள் என்றும் கூறுவர் (மறுமொழியில் காண்க). ஏனெனில் இனங்களின் கலப்பு தான் மொழி கலப்பிற்கும் வித்திடுகிறது என்பதை விளக்க வேண்டியதில்லை.

ஆகவே ஆரிய குடியேற்றம் என்பது நிச்சயமாக நிகழ்ந்த ஒன்றே! அது சிந்துவெளி வீழ்ந்த பின்னரே நிகழ்ந்தது! சங்க இலக்கியங்கள் விந்தியத்திற்கு வடக்கே இருந்த பகுதிகளை ஆரியமாக கூறியது முற்றிலும் சரி.

தொடருவோம்..

ஆரியரும் தமிழரும் – பாகம் 5- விக்கி கண்ணன்

இதுவரை அகநானூறு, சிலம்பு போன்ற நூல்களை கொண்டு ஆரியர்களையும் தமிழர்களையும் ஆராய்ந்தோம். இந்த பதிவில் பதினெண்மேற்கணக்கு நூல்களான பதிற்றுப்பத்து மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் குறிப்பிடப்படும் ‘ஆரிய’ எனும் சொல்லினை குறித்து பார்ப்போம்.

பதிற்றுப்பத்து என்பது சங்ககால சேர அரசர்களை பற்றி ஒரு தொகுப்பாக குறிப்பிடும் நூல். ஒவ்வொரு பத்தும் ஒரு சேர அரசரை போற்றி புகழும். சேர மன்னர்களின் தலைமுறையை வரிசைபடுத்தும் நூல் இது. இந்நூலினை கொண்டு ஆராயுங்கால் ஒரு முக்கியமான வரலாற்று சான்றையும் பார்த்துவிடவேண்டும். அது கரூர் மாவட்டம் புகளூர் என்ற ஊரிலே குகைப்படுகையில் அமைந்திருக்கும் தமிழ் பிராமி/தமிழி கல்வெட்டாகும். அக்கல்வெட்டில்,

“மூதாஅமணன் யாற்றூர் செங்காயபன் உறைய கோ #ஆதன் செல்லிரும்பொறை மகன் #பெருங்கடுங்கோ மகன் #இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மூவரும் பதிற்றுப்பத்தின் கடைசி மூன்று பத்தில்(7,8,9) குறிப்பிடப்படும் சேர அரசர்கள் தான் என்பது கவனிக்கத்தக்கது. இதனைக்கொண்டு இந்நூலின் நம்பகத்தன்மையை ஓரளவு தீர்மானிக்க முடிகிறது. இனி பாடல் வரிகளை கொண்டு ஆராய்வோம்.

பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்து , இமைய வரம்பன் நெடுஞ்சேரலாதனை குமட்டூர் கண்ணனார் பாடியது. இதில்,

“#ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்னம் குமரியொ(டு) ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம்தபக் கடந்தே”

என ஆரியர்கள் வாழும் இமயம் முதல் குமரி வரை இருந்த நிலப்பரப்பை ஆண்டுவந்த அரசன் நெடுஞ்சேரலாதன் என குமட்டூர் கண்ணனார் பாடுகிறார்.

“பேர்இசை மரபின் #ஆரியர் வணக்கி
நயன்இல் வன்சொல் யவனர்ப் பிணித்து”

கூடவே அதே பத்தில் ஆரிய அரசர்களை அடி பணியவைத்ததோடு யவனரையும் இவ்வரசன் பிணித்ததாக பதிவு செய்கிறார்.  செங்குட்டுவனுக்கு முன்பே நெடுஞ்சேரலாதன் ஆரியரையும் யவனரையும் வெற்றிக்கொண்டு இமயத்தில் வில்கொடி நாட்டியது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆரியரும் யவனரும் தனித்தனியாக அடையாளப்படுத்தப்படுவதால் யவனரும் ஆரியரும் ஒருவரல்ல எனும் முடிவுக்கு வரலாம்.

தொடர்ந்து ஐந்தாம் பத்தில் சிலம்பு புகழ் சேரன் செங்குட்டுவனின் வெற்றிகள் குறிக்கப்பட்டுள்ளது. இதனை பாடியவர் ’கரணமமைந்த காசறு செய்யுட் பரணர்’ என போற்றப்பட்டுள்ளார். அவர் கண்ணகிக்கு கல்லெடுத்த தகவலையும் ஆரியரின் செருக்கை அடக்கிய தகவலையும் பதிவு செய்கிறார்.

“கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்
கான்நவில் கானம் கணையின் போகி   
#ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை”

இதேபோல் நற்றிணையில் மருதம் திணையில் ஒரு பாடல் ஆரியருடனான போரை குறிப்பிடுகிறது.

“#ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்கு” – நற்றிணை 170

அதாவது முள்ளூர் என்ற ஊரிலே ஆரியர் நெருங்கிச் செய்த போரின்கண்ணே பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையையுடைய மலையனது; ஒரு வேற்கு ஓடி ஆங்கு – ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதுபோல என குறிப்பிடுகிறது.

அதாவது ஆரியருடனான போரானது வெறும் வடக்கில் மட்டுமே நிகழவில்லை. ஆரியர்கள் தென்னகம் நோக்கி படையெடுத்திருப்பதும் இங்கும் தமிழ் அரசனின் ஒரு வேலுக்கே அவர்கள் அஞ்சி ஓடியிருக்கிறார்கள் என்பதும் எளிதில் புலனாகிறது. (அது நமது ‘வெற்றி #வேல் வீர #வேலாக’ கூட இருக்கலாம் 😉)

சங்க காலம் தொட்டே ஆரிய அரசர்களை (உள்ளூர்/வெளியூர்) வெற்றிக்கொண்டதோடு அதனை பெருமையாக பதிவு செய்திருக்கிறார்கள் தமிழ் மூவேந்தர்கள் என்பதனை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொடருவோம்..

ஆரியரும் தமிழரும் – பாகம் 4- விக்கி கண்ணன்

சிலப்பதிகாரம் கொண்டு தமிழை இகழ்ந்த ஆரிய மன்னர்கள் சுங்கர்கள் அல்லது கன்வர்களாக தான் இருக்க வேண்டும் என்பதை இதுவரை பார்த்தோம். இந்த படையெடுப்பிற்கு உதவிய நூற்றுவர்கன்னர் எனும் சாதவாகனர்களையும் ஆரிய அரசர்கள் என்றே சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது. அதனை இந்த பதிவில் காண்போம்.

“பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும்
#ஆரிய மன்னர் அழகுற அமைத்த
தெள்ளுநீர்க் கங்கைத் தென்கரை யாங்கண்
வெள்ளிடைப் பாடி வேந்தன் புக்கு” – நீர்படைக்காதை 21-24

விளக்கம்: சேரன் செங்குட்டுவன் கேற்பவை அனைத்தையும் ஆரிய மன்னர் அழகுற அமைத்ததுடன் கங்கையின் தென்கரையில் அவர்கள் அமைத்துக்கொடுத்த பாடியில் சேர மன்னன் தங்கினான்.

இந்த ஆரிய மன்னர்கள் நூற்றுவர்கன்னர் தான் என்பதை எப்படி அறிவது? இதே காதையின் பிரிதொரு இடத்தில் இதனை கவனிப்போம்.

“மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு
#ஆரிய #மன்னர் #ஐயிரு #பதின்மரைச்
சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித்” – நீர்படைக்காதை 176-178

விளக்கம்: மாடல மறையோனுக்கு ஐம்பது பொன்னை அளித்துவிட்டு, ஆரிய அரசரான நூற்றுவர்கன்னரை பார்த்து,” நீங்கள் உங்களது சீர்மிகு நாட்டினை நோக்கி செல்க” என விடைதந்து அனுப்பினான் சேரன்.

இதில் வரும் ஐயிருபதின்மர் என்போர் நூற்றுவர்கன்னர் தான் என இதுவரை சிலம்பிற்கு உரையெழுதிய மா.பொ.சி, புலியூர் கேசிகன் முதலானோர் கூறியுள்ளனர்.

சரி நூற்றுவர்கன்னர் என அழைக்கப்படும் சாதவாகனர்கள் ஆரியர்களா? எனில் எவ்வாறு அவர்கள் ஆரிய அரசர்கள் எனும் கேள்வி எழுகிறது. சாதவாகனர்கள் பௌத்தம் முதலான அவைதீக மதங்களை ஆரம்ப காலத்தில் ஆதரித்து வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மகாயான பௌத்தமே சாதவாகனர்கள் ஆண்ட அமராவதி, நாகர்ஜூனகொண்டாவில் தான் செழித்து வளர்ந்தது என்பது நன்கு அறியத்தக்கது. ஆனாலும் மகாயான பௌத்தத்தை ஆரிய பௌத்தமாக பார்க்கும் வழக்கம் உண்டு. காரணம் நாகர்ஜூனர் எனும் பிராமணர் தான் மகாயானத்தை தோற்றுவித்தவராக கூறுவர். சாதவாகனர்களில் கிபி முதலாம் நூற்றாண்டை சேர்ந்த புகழ்பெற்ற அரசன் கௌதமிபுத்ர சதகர்னி. இவனை தொடர்ந்து அரியணை ஏறிய வசிஷ்டபுத்ர புலுமாவி தனது நாசிக் கல்வெட்டில், கௌதமிபுத்ர சதகர்னியின் புகழாரங்களை பதிவு செய்கிறார். (பார்க்க: Epigraphia Indica Vol 8)

அதில் “சத்திரியர்களின் பெருமையையும் புகழையும் குலைத்தவனும் ஏக பிராமணனுமானவன் சதகர்னி” எனும் புகழாரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில் இக்கல்வெட்டின் கீர்த்தியினை எழுதியவர் கௌதமிபுத்ர சதகர்னியின் தாய் கௌதமி பாலஶ்ரீ என குறிப்பிடப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது சாதவாகனர்கள் தாய்வழி பெயரை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தான். சதகர்னியின் மகன்களும் வசிஷ்டபுத்ர (வசிஷ்டி) எனும் முன்னொட்டை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் தாய்வழி பெயர்கள் தான்.

சாதவாகனர்கள் பிராமணர்கள் தான் என்பதற்கு இந்த நாசிக் கல்வெட்டு மட்டுமே சான்றாக அமைகிறது என்றாலும் பிராமணர்கள் இல்லை என்பதை மறுப்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆகவே சிலம்பு குறிப்பிடும் ஆரிய அரசர்கள் என்போரில் சுங்கர்கள், கன்வர்களை தொடர்ந்து சாதவாகனர்களும் பிராமண அரசர்களாகவே இதுவரை அறியப்படுவதால் சிலம்பு சுட்டும் ஆரியர்கள் பிராமணர்களாக இருக்கவே அதிக வாய்ப்புகள் உண்டு.

ஆரியர்களை எதிர்த்து செய்த போருக்கு ஆரியர்களே உதவினார்களா? என்றெல்லாம் கேட்க வேண்டாம். வரலாற்று காலம் நெடுகிலும் தமிழ் அரசர்களை எதிர்த்தும் தமிழ் அரசர்களே தான் போரிட்டு வந்திருக்கிறார்கள் என்றும் இன்றைய அரசியல் தளத்தில் திராவிட கட்சியை எதிர்த்து இன்னொரு திராவிட கட்சியே தான் வந்திருக்கிறது என்பதையும் மனதில் கொள்ளவும். அதுபோக யார் யாரிடம் இருந்து இதனை கற்றுக்கொண்டார்கள் என்றும் பார்க்க வேண்டும்.

தொடருவோம்..

ஆரியரும் தமிழரும் – பாகம்- 3- விக்கி கண்ணன்

முதல் பாகத்தில் சிலப்பதிகாரத்திலிருந்து குறிப்பிட்ட சில பகுதியை மட்டுமே பார்த்தோம். இப்பதிவில் முதல் பாகம் நீங்கலாக சிலம்பில் ‘ஆரியர்’ எனும் பெயர் பயின்று வரும் மற்ற சில இடங்களையும் பார்த்துவிடுவோம்.

“செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த #ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக” – நீர்படைக்காதை 5-8.

விளக்கம்: வீரக்கழல் செறிந்தவனான வேந்தன்; தென்னக தமிழர்களின் ஆற்றலை அறியாது மலைந்த ஆரிய மன்னரை கொலைத்தொழில் செய்வதில் முதியோனான கூற்றுவனை போல பிணங்களை கொன்று குவித்தான் செங்குட்டுவன்.

“பாடகச் சீறடி #ஆரியப் பேடியோடு
எஞ்சா மன்னர் இறைமொழி மறுக்கும்
கஞ்சுக முதல்வர் ஈரைஞ் ஞூற்றூவர்
அரியிற் போந்தை அருந்தமி ழாற்றல்
தெரியாது மலைந்த கனக விசயரை
இருபெரு வேந்தர்க்குக் காட்டிட ஏவித்” – நீர்படைக்காதை 186-191.

விளக்கம்: பாடகம் அணிந்த சிறிய பாதங்களை உடைய ஆரிய பேடிகளையும், அழிதல் இல்லாத போந்தைக் கண்ணி சூடிய அருந்தமிழ் வேந்தனின் ஆற்றலை பற்றி தெரியாமல் மோதிய கனக விசயரை மற்ற இருமுடி வேந்தர்களுக்கு காட்டிட சேரன் ஏவினான்.

“வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத் திருக்க வேந்தன்
அமரகத் துடைந்த #ஆரிய மன்னரொடு
தமரிற் சென்று தகையடி வணங்க” – நடுகற் காதை 86-89. 

விளக்கம்: வச்சிரம், அவந்தி, மகத நாட்டு சித்திர மண்டபத்திலே சோழ வேந்தனும் இருந்தான், போர்களத்திலே தன்நிலையிழந்த ஆரிய மன்னர்கள் சென்று அவன் திருவடிகளை வணங்கியதாக மாடல மறையவன் கூறுதல்.

“கொடும்போர் கடந்து நெடுங்கட லோட்டி
உடன்றுமேல் வந்த #ஆரிய மன்னரைக்
கடும்புனற் கங்கைப் பேர்யாற்று வென்றோய்” நடுகற் காதை 119-121

விளக்கம்: கங்கை கரையிலே ஆரிய மன்னரை செங்குட்டுவன் வென்றதை மாடலன் கூறுதல்.

“தண்டமிழ் இகழ்ந்த #ஆரிய மன்னரின்
கண்டனை யல்லையோ காவல் வேந்தே” – நடுகற் காதை 153-154

விளக்கம்: தமிழை இகழ்ந்த ஆரிய மன்னனை கண்டனையோ காவல் வேந்தனே என மாடலன் கூறுதல்.

“#ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கி” – நடுகற் காதை 195.

விளக்கம்: ஆரிய அரசனை அருஞ்சிறையில் இருந்து விடுவித்தான்.

“#ஆரியநாட்டரசோட்டி அவர்
முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப்
பெயர்ந்து போந்து நயந்த கொள்கையிற் கங்கைப்பேர்
யாற்றிருந்து நங்கைதன்னை நீர்ப்படுத்தி வெஞ்சினந்தரு
வெம்மை நீங்கி வஞ்சிமா நகர்புகுந்து” – வாழ்த்துக்காதை.

விளக்கம்: ஆரிய நாட்டு அரசர்களது முடியில் இமயக்கல்லை சுமத்தி கங்கை முதல் வஞ்சி வரை கொண்டு வருதல்..

“அருஞ்சிறை நீங்கிய #ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்”  – வரந்தருகாதை 157-160

விளக்கம்: செங்குட்டுவனின் 50வது ஆண்டின் தொடக்க நாளிலே சிறைநீங்கிய ஆரிய மன்னரும், குடகு, கொங்கன், மாளுவ அரசன், இலங்கை அரசன் கயவாகு போன்றோர் இருத்தல்..

முதலில் சிலப்பதிகாரத்தில் கூறுப்படும் செங்குட்டுவனின் படையெடுப்பு விடயங்கள் நடந்த காலத்தினை மதிப்பிற்குரிய திரு இராம கி ஐயா அவர்களின் ‘சிலம்பின் காலம்’ நூலினை துணைக்கொண்டு மேலோட்டமாக அலசுவோம்.

சேரன் செங்குட்டுவனின் வடபுல படையெடுப்பானது வஞ்சியில் தொடங்கி நீலகிரி மலையினை கடந்து வந்த பாதை வரை சிலம்பிலேயே குறிப்புண்டு. அதன்பின் கர்நாடகத்தினூடே சென்று விந்தியத்தை தாண்டாமல் கிழக்கே தக்காண பீடபூமியின் வழியாக ஆந்திரம், தெலுங்கானம், ஒடிசா வழியே தான் மகத நாட்டு படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் திரு இராம கி அவர்கள். ஏனெனில் இவ்வாறு பயணித்தால் தான் வடக்கு கர்நாடகத்திற்கு மேலே ஆட்சியில் இருந்த நூற்றுவர்கன்னரின் உதவியுடன் கங்கையின் தென்கரை வரை சென்றிருக்கிறார்கள் என அறியமுடிகிறது. அதாவது நூற்றுவர்கன்னரின் அதிகாரமானது அப்போது கங்கைகரை வரையிலும் நீண்டிருக்கிறது.

சரி யார் இந்த நூற்றுவர்கண்ணர்? அவர்கள் தான் சாதவாகனர்கள். ‘சதவா+கன்னர்கள்’ என்பது தான் தமிழில் “நூற்றுவர்கன்னர்’ என வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நூற்றுவர்கன்னர்கள் தான் கிமு 2 ஆம் நூற்றாண்டில் தொடங்கி கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை மகாராஷ்ட்டிரத்தில் இருந்து கர்நாடகம், மத்திய பிரதேசம், வடக்கு ஆந்திரம், தெலுங்கானம், முதலான மத்திய இந்திய பகுதியை ஆண்டுவந்த பேரரசர்கள். அதில் செங்குட்டுவனின் வடபுல படையெடுப்பு நிகழ்ந்த நேரத்தில் இவர்கள் கங்கைகரையில் பாடி அமைத்து செங்குட்டவனுக்கு உதவியதாக சிலம்பு கூறுவதை வைத்து பார்த்தால் நிச்சயமாக சாதவாகனர்கள் மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தினை கட்டுபடுத்திய நேரத்தில் தான் செங்குட்டுவனின் இந்த படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். எனில் கிமு 70 வாக்கில் முதலாம் சதகர்னி என்ற அரசன் தான் இத்தகைய பெரிய ராஜ்ஜியத்தை ஆண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சதகர்னி எனும் பெயரே கூட தமிழில் நூற்றுவர்கன்னர் என வழங்கியிருக்கலாம். அதுபோக சாதவாகனர்கள் தமிழை பெரிதும் மதித்தனர் என்பது அவர்கள் இருமொழிகளில் (பிராக்கிருத பிராமி & தமிழி) நாணயங்கள் வெளியிட்டிருப்பதை கொண்டு உறுதியாக சொல்லலாம்.

சரி செங்குட்டுவன் தோற்கடித்த ஆரியர் என்போர் யார்? என்ற கேள்விக்கு இப்போது விடை காணுவோம்!

சாதவாகனர்கள் கங்கைகரை வரையில் வந்து செங்குட்டுவனுக்கு உதவியதை பார்த்தோம். அப்படியானால் மகதநாட்டினை ஆண்டு வந்தவர்களின் அதிகாரம் அந்த சமயத்தில் குன்றியிருத்தல் வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

மகத நாட்டின் அதிகாரம் குன்றியது எப்போது? மௌரியர்கள் ஆட்சியில் பாரத தேசத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்த பின் மகதநாடு சுங்கர்களின் எழுச்சியால் வீழ்கிறது. சுங்கர்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டில் மௌரியர்களை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றினர். இந்திய வரலாற்றில் முதன்முதலில் பிராமணர்கள் ‘மனுதர்மத்தை மீறி’ நேரடியாக அரசரானது என்றால் அது சுங்கர்கள் தான். சுங்கர்கள் கிமு 75 வாக்கில் கன்வா சாம்ராஜ்ஜியத்திடம் வீழ்ந்தனர். இவர்களும் பிராமணர்கள் தான். இந்த சுங்கர்களின் ஆட்சி வீழ்ந்து கன்வர்கள் எழுச்சி நடைபெற்ற சிறிது காலத்திலேயே செங்குட்டுவனின் படையெடுப்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது திரு இராம கி ஐயா அவர்களின் கருத்து.

ஆகவே கங்கைக்கரைக்கு வடக்கே இருந்த ஆரிய அரசர்கள் தமிழை இகழ்ந்ததாகவும், ஆதலால் அவர்களை சேரன் வென்று இழுத்து வந்ததாகவும் கூறுகிறது சிலம்பு. எனவே சிலம்பு குறிப்பிடும் ஆரிய அரசர்கள் என்போர் கன்வர்கள் (அ) சுங்கர்களே! அவர்கள் ஆட்சி செய்த தேசமே ஆரிய தேசமாக இருத்தல் வேண்டும்.

ஆரியரும் தமிழரும் – பாகம் 2- விக்கி கண்ணன்

கடந்த பதிவில் ஆரியர் குறித்து சிலப்பதிகாரம் கொண்டு பார்த்தோம். இதில் அகநானூறு பாடலில் வரும் ஆரியர்களை குறித்து காண்போம்.

” மாரி யம்பின் மழைத்தோற் சோழர்
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை
#ஆரியர் படையின் உடைகவென்
நேரிறை முன்கை வீங்கிய வளையே” – அகம் 336

விளக்கம் : வல்லம் என்னும் ஊரின் வெளிப்புறக் காவல்-காட்டில், தோல் கேடயம் அணிந்துகொண்டு மழையின் நீர்த்தாரை விழுவது போல அம்பைச் சொரியும் சோழர் படையை எதிர்த்துப் போரிட்ட #ஆரியர் படை உடைந்து பின்வாங்கி ஓடியது போல ஓடச்செய்வேன். அப்படி அவர்களை (ஊர்பரத்தையரை) ஓடச் செய்யாவிட்டால், என் கையின் மணிக்கட்டில் உள்ள வளையல்கள் உடைந்து விழட்டும் என நயபரத்தை தோழியிடம் கூறுகிறாள்.

ஆக சேரன் சிலம்பதிகாரத்தில் இமயமலை சாரலில் ஆரியர்களை எதிர்த்து சைவ வேடமிட்டு ஓடியவர்களை பிடித்து இழுத்து வருகிறான். இது வெளிநாட்டு மைதானத்தில் கிடைத்த வெற்றி. ஆனால் அகநானூற்றில் சோழனோ வந்த சண்டையை விடாமல் விரட்டி அடித்திருக்கிறான்.

“#ஆரியர் அலறத் தாக்கிப் பேர்இசைத்
தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி யன்னவென் னலம்தந்து சென்மே” – அகம் 396

அதாவது சிலம்பு கூறிய அதே சம்பவத்தை அகநானூறு மீண்டும் நினைவூட்டுகிறது.

விளக்கம்:
(செங்குட்டுவன்) சினம் கொண்டு #ஆரியர்களை அலறும்படித் தாக்கி, பழமையான வடமலை இமயத்தில் தன் வளைந்த வில் சின்னத்தைப் பொறித்தான்.
நீ பிரிந்து செல்வதாயின், வில் பொறித்தவனின் தலைநகரம் வஞ்சி போன்ற என் அழகினை, திரும்பத் தந்துவிட்டுச் செல்க என பரத்தை ஒருத்தி தன்னுடன் வந்த தலைவன் ஒருவனை பார்த்து சொல்கிறாள்.

அடுத்த ஆரியர்கள் வாழ்ந்த பகுதியினை அகம்- 398 ஆம் பாடல் ,

“#ஆரியர் பொன் படு நெடு வரை புரையும்” என குறிப்பிடுகிறது. அதாவது பொன்னிறமாக காட்சியளிக்கும் இமயத்தில் அருகே வாழ்பவர்களாக கூறுகிறது.

பொதுவாக இன்றைய நாட்களில் ஆரிய என்பதற்கு உயர்ந்த என்றும் ஆரியர்கள் என்போர் துறவிகள், ரிஷிகள் என்றும் பொருள் கூறப்படுகிறது. ‘ஆரிய’ எனும் வார்த்தைக்கு இவ்வாறும் சில இடங்களில் பொருள் கொள்ளலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் அவ்வாறு பொருள்கொள்ள முடியாது. சமஸ்கிருதமானாலும் தமிழானாலும் மற்ற மொழியானாலும் ஒரு சொல்லுக்கு இரண்டு, மூன்று பொருள் வழங்கப்படும். அது அனைத்தும் அது சுட்டப்படும் இடத்தினை கொண்டு தான் அது எவ்வாறு சுட்டப்பட்டது என்பதை அறிய இயலும்.

எடுத்துக்காட்டாக மேற்குறிப்பிட்ட பாடலை ‘உயர்ந்த’ என்ற பொருளிலும் ‘இமயத்தில் வாழும் துறவிகள்/ரிஷிகள்’ என்ற பொருளிலும் வைத்து பாருங்களேன். அப்படி பார்த்தால் தமிழக அரசர்கள் அப்போதே நாத்திக கோட்பாட்டினை ஏற்று இமயத்தில் இருந்து வந்த சாமியார்களை வெளு வெளுனு வெளுத்து அனுப்பினார்கள் என பொருள் கொள்வதா? இல்லை தங்களை விட பிறப்பின் அடிப்படையில் ஆரியர்கள் எல்லாம் எப்படி உயர்ந்தவர்களாக இருக்கலாம். நாங்களும் உயர்ந்தவர்கள் தான் என இறங்கி அடித்து ஓடவிட்டார்களா? இல்லை சிலம்பு சுட்டுவதை கொண்டு பார்த்தால் அன்றைய துறவிகளும்/சாமியார்களும் கூட இன்றைய சங்கராச்சாரியார்கள் போன்று தமிழை இகழ்ந்ததால் கோபமுற்று படையெடுத்து சென்று அழித்தொழித்தார்களா?

இன்றைக்கு கொடுக்கும் விளக்கத்தை கொண்டு இதனை பார்த்தாலும் கணக்கு சரியாக வரவில்லையே? கடந்த நூற்றாண்டில் தான் இந்த பிரிவினை வந்தது என்றால் சங்க இலக்கியங்கள் கூறும் ஆரியர்கள் எல்லாம் யார்?

இதுபோன்ற பல சான்றுகளுடன் கேள்விகளை தொடருவோம்..

ஆரியரும் தமிழரும் – பாகம் -1- விக்கி கண்ணன்

 
ஆரியம் என ஒன்று இல்லை. அது ஒரு போலி கற்பிதம். கடந்த நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல் பிரிவினைவாதம் என்றெல்லாம் ‘இன்று’ பலர் கூறிவருவதால் அதனை ஒரு தொடர் பதிவுகளாக வரலாற்று சான்றுகளுடன் வெவ்வேறு தளங்களில் எழுதுவதாக தீர்மானித்திருக்கிறேன். அதாவது வரலாறு, இலக்கியம் (வடமொழி, தமிழ்), கல்வெட்டியல், நாணயவியல், தொல்லியல், மானிடவியல், மொழியியல், ஆங்கிலேயர் கால கூற்றுகள், கடந்த காலங்களில் ஆரியர்களுக்கே இருந்த ஆரிய தற்பெருமை என ஏறத்தாழ அனைத்து தளங்களிலும் ஆரியருக்கும் தமிழருக்குமான வேறுபாடுகளை தொடர்ச்சியாக காணவிருக்கிறோம். நிற்க! 

 தமிழ் இலக்கியங்களில் இருந்தே ஆரிய வரலாற்றினை தொடங்குவோம். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் #ஆரிய என்கிற வார்த்தை வட இந்திய பகுதியில் இருக்கும் மன்னர்களையோ மக்களையோ குறித்தே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டை கபிலர் ஆரிய அரசனான பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க பாடப்பட்டதாக வரலாறு கூறும். இப்பதிவில் சிலம்பினை மட்டும் கொண்டு தொடங்குவோம். 

 சிலம்பில் வரும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனே ‘ஆரிய படைக்கடந்த நெடுஞ்செழியன்’ என இளங்கோவடிகளால் குறிக்கப்படுகிறான். அதனை, 

 ” #வடவாரிய படை கடந்து

தென்தமிழ் நாடு ஒருங்கு காணப்

புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்

அரசு கட்டிலிற் றுஞ்சிய பாண்டியன்

நெடுஞ்செழியன்” என பாடுகிறார் இளங்கோவடிகள். 

 அதாவது சேரன் செங்குட்டுவன் வடக்கே செல்வதற்கு முன்பே பாண்டியன் நெடுஞ்செழியன் ஆரிய படைகளை வீழ்த்தியிருக்கிறான். 

தொடர்ந்து பாண்டியனின் இறப்பிற்கு பின் சேரன் செங்குட்டுவன் இரண்டாவது முறையாக இரண்டு காரணங்களுக்காக வடபுல படையெடுப்பினை நிகழ்த்துகிறான். அதில் முதல் காரணம் ஆரிய அரசர்கள் தமிழினை இகழ்ந்ததால் அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டுவது. இரண்டாவது இமயத்தில் வில் கொடியை நட்டு கண்ணகிக்கு சிலையெடுக்க கற்களை கொண்டு வருவது. 

 அதில் செங்குட்டுவன் ஆரிய அரசர்களை நேருக்கு நேர் சந்தித்த இடம் இன்றைய காசிக்கு அருகில் இருக்கலாம் என்பது ‘சிலம்பின் காலம்’ என்ற நூலெழுதிய ஐயா திரு இராம கி அவர்களின் கருத்து. செங்குட்டுவன் ஆரிய அரசனான கனகவிசயனை சந்திக்கும் இடத்தினை இளங்கோவடிகள் பின்வருமாறு விளக்குகிறார்.

 
“எருமைக் கடும்பரி யூர்வோன் உயிர்த்தொகை ஒருபக லெல்லையின் உண்ணு மென்பது

#ஆரிய வரசர் அமர்க்களத் தறிய” – கால்கோட்காதை 215. 

 அதாவது எருமைகடாவாகிய குதிரையின் மீது அமர்ந்து ஊர்ந்து வரும் மன்னனை ஒரு பகல் பொழுதிலே சேர மன்னன் வீழ்த்தும் நுற்பத்தை ஆரியர்கள் போர்க்களத்தில் தான் அறிந்தார்கள். 

 இதுவரையில் ஆரியத்தை குறித்து வந்த இளங்கோவடிகள் இதற்கு அடுத்த வரியில் இன்னொரு அற்புதமான வரலாற்று தகவலை பதிவு செய்கிறார். அது, 

 “வாய்வாள் ஆண்மையின் வண்தமிழ் இகழ்ந்த காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும் ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு செங்குட் டுவன்தன் சினவலைப் படுதலும்- சடையினர் உடையினர் சாம்பற்பூச்சினர்” – கால்கோட்காதை 225. 

 அதாவது வடநாட்டில் உட்கார்ந்துக்கொண்டு வாயாலேயே தமிழை இகழ்ந்த கனகன் விசயன் என்ற வடநாட்டு ஆரிய அரசர்கள் ஐம்பத்திருவரெனும் கடுந்தேளரோடு களம்புகுந்த நேரத்தில் செங்குட்டுவனின் சினத்தை கண்டு அஞ்சி சிதறி ஓடினர். வெறுமனே ஓடவில்லை. அங்க தான் அப்பட்டமான ஒரு உண்மையினை பதிவு செய்கிறார் இளங்கோவடிகள். நீண்ட சடை, உடை அணிந்து சாம்பல் நீற்றினை பூசிக்கொண்டு போர் களத்தில் இருந்து தப்பித்து ஓடுகிறார்கள். சம்பவம் நடந்த இடம் காசியாக இருக்க வேண்டும் என்பது திரு இராம கி அவர்கள் பல சான்றுகளுடன் விளக்கியிருப்பதாலும் காசியில் சைவ சமயத்தவர்கள் பல நூற்றாண்டுகளாக மேற்குறிப்பிட்ட தோற்றத்தில் இருப்பதாலும் அவர்கள் சைவ வேடம் பூண்டு தப்பித்திருக்கிறார்கள் என அறியமுடிகிறது. 

 சிலம்பு காலத்திலே சைவ சமயம் இருந்ததையும் தவக்கோலம் பூண்டு ஆரியர்கள் ஓடியதையும் நடுகற் காதையில் மற்றொரு முறை வருவதை கொண்டும் அறியலாம். அது,

 “இமயச் சிமையத் திருங்குயி லாலுவத்

துமையொரு பாகத் தொருவனை வணங்கி
அமர்க்களம் அரசன தாகத் துறந்து
தவப்பெருங் கோலங் கொண்டோர் தம்மேல்
கொதியழற் சீற்றங் கொண்டோன் கொற்றம் புதுவ தென்றனன் போர்வேற் செழியனென்” – நடுகற்காதை 102 – 107

 அதாவது இமயமலை சாரலில் இருந்த திருங்குயிலாலுவம் எனும் இடத்தில் உமையொருபாகனாக கோவில் கொண்டுள்ள சிவபெருமானை வணங்கி, போர்க்களம் நும் மன்னனதாகுமாறு விட்டுவிட்டு ஓடிப்போய் தவப்பெருங்கோலம் கொண்டனர். அப்படி வீரமற்று ஓடிய ஆரிய மன்னர்களையும் கொதியழில் சீற்றம் கொண்டு பிடித்து வந்த நும் மன்னனின் வெற்றிச்செயல் தமிழக வீரவரலாற்றிலேயே இல்லாத புதுமையான விடயம் என மற்றைய இரு முடியுடைய வேந்தர்கள் சேரனை பற்றி கூறியதை செங்குட்டுவனிடம் நீலன் உரைக்கிறான். 

 அதாவது சைவ வேடம் பூண்டு ஓடியவர்களை கூட விட்டுவிடாமல் அடையாளங்கண்டு பிடித்து வந்த செயல் நல்லதல்ல என மற்ற இரு முடியரசர்கள் கூறும் அளவிற்கு ஆரியர்களை ‘அமிதாப் மாமா’ அளவில் கண்டுபிடித்து இழுத்து வந்திருக்கிறான் சேரன். 

அதாவது இன்று மட்டுமே ஆரியர்கள், சைவ வேடம் பூண்டு தங்களை காப்பாற்றிக்கொள்ளவில்லை. சிலம்பு காலத்திலேயே இதான் நடந்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அன்றும் இன்றும் என்றுமே அவர்கள் ‘சைவ’ வேடதாரிகள் தான்! 

 இப்போர் எழுச்சியும் வெற்றியும் தமிழ் மறத்தை ஆரியருக்கு உணர்த்தவே நடந்ததேயன்றி நாடுகொள்ளும் ஆசையால் அல்ல என்பதனை உணர்க. அன்றைய நாளில் ஆரிய அரசர்கள் தம்மால் வெற்றிக்கொள்ள முடியாத அதேசமயம் தம்மைக்காட்டிலும் நாகரீகத்திலும் செம்மையான வாழ்விலும் உயர்ந்திருந்த தமிழர்களையும் தமிழையும் வாய் வார்த்தைகளால் இன்றை போலவே அன்றும் பழித்து இன்பம் கண்டபொழுது, இன்றைய தமிழர்கள் போன்று பொறுத்துக்கொண்டு இல்லாமல் அன்றைய தமிழரசர்கள் ஆரிய செருக்கினை அடக்கி அவர்களின் நாட்டிற்கே சென்று வெற்றிக்கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 இன்று போலே அன்றும் வடபுலம் தென்புலம் என இருசார் பிரிந்து, உறவும் பகையுமாய் கலந்து வாழ்ந்த நிலையும் உணரப்படும். இதனால் இமய வெற்றி என்பதே தமிழருக்கு பெரு வெற்றியாகவும் புகழ்வெற்றியாகவும் மதிக்கப்பட்டது என்பது விளங்கும். 

 ஆகையால் தமிழையும் தமிழர்களையும் ‘டமில்’, ‘டம்ளர்’ என விளிக்கும் ஆரிய செருக்கினையும் ஆரியத்துக்கு ஏவலாளிகளாக இங்கிருக்கும் குமஸ்தாக்களின் ஆணவ மலத்தினையும் அடக்கும் ஆண்மை தமிழினத்திடம் உண்டு. இது தான் ஈராயிரம் ஆண்டுகால நீண்ட நெடிய வரலாறு. பாவம் அவர்களால் வார்த்தைகளால் மட்டுமே இகழ்ந்து இன்பம் காண முடிந்தது. முடிகிறது. 

தொடர்வோம்…